மூன்று சந்தேகநபர்களை ரூபா 23 கோடி பெறுமதியான 33½ கி.கி. நிறை கொண்ட ஏஷ், குஷ், கொக்கைன் ஆகிய போதைப் பொருட்களுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்று (28) அதிகாலை பேலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேலியகொடை – நீர்கொழும்பு வீதியில் அரச பொருளியலாளர் கூட்டுத்தாபனத்திற்கு அருகிலுள்ள பிரதேசத்தில் பேலியகொடை பொலிஸ் நிலையத்தினால் இரவு நேர நடமாடும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிற்கு அமைய, குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, 1kg கொக்கைன் போதைப் பொருள், 24.5kg கிலோ கிராம் ஏஷ், 8kg குஷ் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 33, 34, 49 ஆகிய வயதுகளுடைய வத்தளை மற்றும் நாத்தாண்டி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் சுமார் ரூ. 230 இலட்சம் (ரூ. 23 கோடி) தெரு மதிப்பை கொண்டது என தெரிவிக்கப்படுகின்றது.
பொலிசார் சுற்றிவளைப்பு மேற்கொள்வதற்காக அப்பிரதேசத்திற்கு சென்ற வேளையில், சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டி மற்றும் முச்சக்கர வண்டி ஆகியவற்றிலிருந்து பொருட்களை ஏற்றிய வண்ணம் இருப்பதை பொலிசார் அவதானித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த இடத்தை சுற்றி வளைத்த பொலிசார் அங்கு சோதனையிட்டபோது 3 அட்டைப் பெட்டிகள் மற்றும் 4 பயணப் பைகள் ஆகியவற்றுடன் மூன்று சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
குறித்த அட்டைப் பெட்டிகள் மற்றும் பயணப் பொதிகளை சோதனையிட்டபோது அதில் மேற்படி போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.