நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதலாவது மின்பிறப்பாக்கி தொகுதி திருத்தப்பட்டுள்ளதால் நாளாந்த மின் விநியோக துண்டிப்பினை இனி ஒரு மணித்தியாலமளவில் மட்டுப்படுத்த முடியும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் செயலிழக்கப்பட்ட முதலாவது மின் பிறப்பாக்கி தொகுதி தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதால் தேசிய மின்னுற்பத்தி கட்டமைப்பில் 300 மெகாவாட் மின் இணைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இனிவரும் நாட்களில் நாளாந்த மின்விநியோக தடையினை ஒரு மணித்தியாலமளவில் மட்டுப்படுத்த முடியுமா என இலங்கை மின்சார சபையிடம் கோரியிருந்தோம்.
மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருள்,நிலக்கரி ஆகியவற்றின் கிடைப்பனது சாதகமாக உள்ளதுடன்,நீர்மின்னுற்பத்தியின் வீதமும் அதிகரித்துள்ளதால் மின்விநியோக தடையினை ஒருமணித்தியாலத்திற்கு வரையறுக்க முடியும் என இலங்கை மின்சார சபை குறிப்பிட்டதை தொடர்ந்து நேற்றைய தினம் ஒரு மணித்தியாலம் மின்விநியோக தடை அமுல்படுத்தப்பட்டது.
முறையற்ற வகையில் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கும் குற்றச்சாட்டு அடிப்படையற்றதாகும்.நூறு வீதமளவில் மின்கட்டணத்தை அதிகரிக்க இலங்கை மின்சார சபை பரிந்துரைத்த போதும்,இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு 75 சதவீத மின்கட்டண அதிகரிப்பிற்கு அனுமதி வழங்கியது.
குறைந்த வருமானம் பெறும் மின்பாவனையாளர்களுக்கு இடைக்கால வரவு- செலவு திட்டத்தின் ஊடாக நிவாரனம் வழங்கப்படும் என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. வரவு-செரவு திட்டத்தின் உள்ளடக்கத்தை முழுமையாக பரிசீலனை செய்வோம் என்றார்.
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் முதலாவது மின்பிறப்பாக்கி தொகுதி இரு வாரங்களுக்கு முன்னர் செயலிழந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் வரை நாளாந்தம் மூன்று மணித்தியாலங்கள் மின்விநியோக தடை அமுல்படுத்தப்பட்டது.
மின்நிலையத்தின் இரண்டாவது மின்பிறப்பாக்கி தொகுதியின் திருத்த பணிகள் இன்னும் இரண்டு மாதங்களுக்கு பின்னர் முழுமையடையும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.