வியட்நாம் கடற்பகுதியில் கப்பலொன்றில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்கள் மீளவும் இலங்கைக்கு செல்வதற்கு விரும்பவில்லை என்று உணவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வறுமையில் வாழ்ந்து வந்தோம். மேலும் அதன் காரணமாகவே நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு முயற்சித்தோம் என்றும் இருப்பினும் தற்போது மீண்டும் தாம் இலங்கைக்கு செல்வதற்கு முடியாது என்றும் வியட்நாமில் மீட்கப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
கடலில் மூழ்கும் நிலையில் இருந்த படகொன்றில் இருந்து புலம்பெயர்ந்தோர் என சந்தேகிக்கப்படும் சுமார் 303 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் சிங்கப்பூர் கடற்படையினரால் கடந்த திங்கட்கிழமை மீட்கப்பட்டு இருந்தனர்.
கனடா செல்வதற்கு முயற்சித்த போது குறித்த படகு கடலில் மூழ்கிய கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் புகலிடக்கோரிக்கையாளர்கள் மீட்கப்பட்டு வியட்நாமில் 3 முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
குடியேற்றவாசிகளை மீட்க இலங்கை அரசாங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய நாட்டுக்கு அழைத்து வர வியட்நாம் அதிகாரிகளுடன் இராஜதந்திர தொடர்புகளை ஆரம்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இலங்கையில் இருந்து குழுவாக வியட்நாமிற்கு பயணித்ததாகவும் அங்கிருந்து லேடி ஆர் 3 எனும் படகு மூலம் கனடாவிற்கு செல்வதற்கு முயற்சித்ததாகவும் குறித்த படகில் இருந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது குறித்த புகலிடக்கோரிக்கையாளர்களுள் ஒருவர் “நாம் உயிர் போகும் சந்தர்ப்பத்தில் தான் இலங்கையில் இருந்து வந்தோம். எம்மை எவ்வாறாவது காப்பாற்றுங்கள்.இலங்கையில் மீண்டும் எங்களால் வாழ முடியாது. எங்களுடைய பிள்ளைகளுடன் இலங்கையில் வாழ்வதற்கு முடியாது உள்ளது. எனவே மற்றைய நாட்டு அரசாங்கம் எங்களை காப்பாற்ற வேண்டும் என்றார்.
மேலும் மற்றுமொருவர் நாம் வியட்நாமில் கைது செய்யப்பட்டுள்ளோம். தற்போது அகதிகளாக இருக்கிறோம். நாம் மீளவும் இலங்கைக்கு செல்வதற்கு விரும்பவில்லை எங்களை இந்த நாட்டு அரசாங்கம் இலங்கைக்கு அனுப்புவதற்கு தயாராகிறது. நாங்கள் இலங்கையில் பல்வேறு இன்னல்களுக்கும் மத்தியிலும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்களுக்குள் மத்தியில் வாழ்ந்து வந்தோம் எங்களுக்கு அங்கு சென்று வாழ முடியாது என்றார்.
இதற்கிடையில் இலங்கைக்கு திரும்புவதற்கு விருப்பமில்லை என்று உணவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பான ஐ.ஓம்.எம் அமைப்பினர் புகலிடக் கோரிக்கையாளர்களை சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டு இருந்தனர். இதையடுத்து புகலிடக்கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்புவதற்கான சாத்தியக்கூறு இல்லை என்று ஐ.ஓம்.எம் அமைப்பினர் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.