2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை ஜனாதிபதியும், நிதி,பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க திங்கட்கிழமை (14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பார்.
அத்துடன் திங்கட்கிழமை பிற்பகல் 01.30 மணிக்க வரவு செலவு திட்டம் தொடர்பில் ஜனாதிபதி சபையில் விசேட உரையாற்றுவார்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை 15 ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை இடம்பெற்று வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு டிசெம்பர் மாதம் 08 ஆம் திகதி இடம்பெறும்.
2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை இரண்டாம் மதிப்பீட்டுக்காக எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு மீதான விவாதம் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி திங்கட்கிழமை வரை இடம்பெறும்.
இதன் மீதான வாக்கெடுப்பை நவம்பர் மாதம் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை மீதான விவாதம் நவம்பர் மாதம் 23 ஆம் திகதி புதன்கிழமை முதல் டிசெம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை இடம்பெறுவதுடன் இதன் மீதான வாக்கெடுப்பை டிசெம்பர் மாதம் 08 ஆம் திகதி வியாழக்கிழமை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை 14 ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 08 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஞாயிறு மற்றும் போயா தினங்களை தவிர ஏனைய நாட்களில் பாராளுமன்ற அமர்வு இடம்பெறும்.
வரவு – செலவு திட்டம் மீதான விவாதம் நடைபெறும் காலப் பகுதியில் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரத்தை ஒதுக்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் , டிசெம்பர் மாதம் 09 ஆம் திகதி காலை 09.30 மணி முதல் பிற்பகல் 05.30 மணிவரையான காலப்பகுதியில் 50 வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.