வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் கட்சிகளின் தலைவர்கள் அடுத்தவாரம் கொழும்பில் கூடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா வீரகேசரியிடம் தெரிவித்தார்.
“நான், விக்னேஸ்வரன், சுரேஸ்பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் உள்ளிட்டவர்களுடன் பேச்சுக்களை நடத்தினேன்.
அவர்கள் அடுத்தவாரம் கொழும்பில் கூடுவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளார்கள்” என்று மாவை.சோ.சேனாதிராஜா குறிப்பிட்டார்.
குறித்த சந்திப்பானது, 25 அல்லது 26 ஆம் திகதி நடைபெறுவதற்கு பெரும்பாலான தலைவர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர் என்றும் மாவை.சோ.சேனாதிராஜா குறிப்பிட்டார்.
முன்னதாக, சமஷ்டித் தீர்வினை கூட்டாக முன்வைப்பதற்கான கலந்துரையாடல்களைச் செய்வதற்காக கடந்த 15 ஆம் திகதி கொழும்பில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்திற்கு வருகை தருமாறு, வடக்கு, கிழக்கை மையப்படுத்தி அரசியல் கட்சிகளுக்கு எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் என்ற அடிப்படையில் அழைப்பு விடுத்திருந்தார்.
எனினும், கூட்டமைப்பில் அங்கம் வகித்துள்ள பங்காளிக்கட்சிகளான ரெலோ, புளொட் கூட அந்த அழைப்பினை ஏற்று குறித்த தினமன்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றிருக்கவில்லை.
எனினும், சம்பந்தன், மாவை.சோ.சேனாதிராஜா, சுமந்திரன் ஆகியோர் மட்டும் கூடிக்கலந்துரையாடல்களைச் செய்திருந்தனர்.
இதன்போது, ஏனைய கட்சிகளை மீண்டும் அழைப்பதற்கும் அவர்கள் விரும்பும் காலம் இடத்தில் அவர்களைச் சந்திப்பதற்கு தான் தயாராக இருப்பதாகவும் சம்பந்தன் பிரதிபலித்திருந்தார்.
அத்துடன் ஏனைய கட்சித்தலைவர்களை அழைப்பதற்கான பொறுப்பினை மாவை.சோ.சேனாதிராஜாவிடத்திலும் ஒப்படைந்திருந்தார்.
இந்தப்பின்னணியில் தான், மாவை.சோ.சேனாதிராஜா ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனும் தனித்தனியாக உரையாடி இணக்கப்பாட்டைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
அதேநேரம், இதுவரையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் மாவை.சோ.சேனாதிராஜா உரையாடியிருக்கவில்லை.
இதுபற்றி குறிப்பிட்ட, சேனதிராஜா, “நான் கஜேந்திரகுமாருடனும் பேசவுள்ளேன். அதற்கான முயற்சிகளை எடுத்துள்ளேன்.
தொலைபேசி வாயிலாகவோ அல்லது நேரிலோ சந்திப்பதற்கு விரும்புகின்றேன். இந்த விடயத்தில் அவரையும் உள்ளீர்ப்பதற்கான என்னுடைய அதீத கரிசனையைக் கொண்டு பிரயத்தனங்களைச் செய்கின்றேன்” என்றார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கரூபவ் வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடன் பேச்சுக்களை முன்னெடுக்க தயாராக இருப்பதாக அறிவித்த நிலையில் தான் தமிழ்க் கட்சிகளுக்கு மத்தியில் இவ்வாறு ஒருங்கிணையும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதேநேரம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறித்த அறிவிப்பை விடுத்து இருவாரங்களாகின்றபோதும் தற்போது வரையில் அவருடைய தரப்பிலிருந்து எந்தவொரு தமிழ்க் கட்சிக்கும் அழைப்போதும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.