ஆஸ்திரேலியாவின் குடிவரவுத் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த 8 வங்கதேச தஞ்சக்கோரிக்கையாளர்கள் பத்தாண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விடுதலை நியாயமற்ற தடுப்பு காவல் முறையை தற்போதைய ஆஸ்திரேலிய அரசாங்கம் திரும்ப பெறுகிறது என்பதற்கான ஓர் அறிகுறி என தஞ்சக்கோரிக்கையாளர்களின் வழக்கறிஞர் ஒருவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். அதே சமயம், காலவரையற்ற தடுப்புக் காவலில் இழந்த வாழ்க்கையை குறித்து கடும் கவலையை தஞ்சக்கோரிக்கையாளர்களை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
“என்னுடைய 10 ஆண்டுகால வாழ்க்கையை யாரால் மீண்டும் தர முடியும். எனது இளம் பருவத்தின் மதிப்புமிக்க இந்த 10 ஆண்டு காலத்தை என்னால் ஒருபோதும் திரும்பப் பெற முடியாது,” எனக் கூறியுள்ளார்.
கடந்த நவம்பர் 10ம் தேதி வேலைச் செய்வதற்கான உரிமையுடைய 6 மாத தற்காலிக விசாக்களில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தி கார்டியன் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
வங்கதேசத்துக்கு திரும்புவதற்கான வாய்ப்பே எனக்கு கிடையாது எனக் கூறியுள்ள ஒரு தஞ்சக்கோரிக்கையாளர் அங்கு சென்றால் நான் மதவெறியர்களால் கொல்லப்படக்கூடும் எனத் தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஏப்ரல் மாதம் உருவாக்கப்பட்ட புதிய அமைச்சருக்கான குறிப்புப்படி, ஆஸ்திரேலியாவின் 12 தடுப்பு மையங்களில் 1,414 பேர் சிறைப்படுத்தப்பட்டிருக்கின்றனர், அதில் 61 சதவீதமான பேர் விசா ரத்து செய்யப்பட்டதால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், 14 சதவீதமான பேர் அங்கீகரிக்கப்படாத கடல்வழிப் பயணங்களின் மூலம் ஆஸ்திரேலியாவுக்குள் வர முயன்றதற்காக வைக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.