நியாயமற்ற முறையில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமை மற்றும் மின்சார சேவையாளர்கள் பாதிக்கப்படும் வகையில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கட்கிழமை (27) 12 தொழிற்சங்கங்கள் இணைந்து லங்விம பிரதான அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.
இது தொடர்பில் மின்சாரசபை தொழிற்சங்க கூட்டமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
நியாயமான விலையில் தடையற்ற மின் விநியோகத்தை வழங்குதல் மற்றும் முறையான சேவைகளை வழங்குதல் தொடர்பில் 6000 கையெழுத்துக்களுடன் மின்சாரசபை தலைவரிடம் யோசனையொன்று கையளிக்கப்பட்டது.
இதில் சேவையாளர்கள் தொடர்பான பிரச்சினை தொடர்பிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் இதுவரையில் அது தொடர்பில் எவ்வித அவதானமும் செலுத்தப்படவில்லை.
இதன் காரணமாக மின்சாரசபையைச் சேர்ந்த சுமார் 25 000 சேவையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் அடிப்படை காரணங்கள் எவையும் இன்றி உதாசீனப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக பெரும்பாலான சேவையாளர்களுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு முதல் வருடாந்த கொடுப்பனவு கூட வழங்கப்படவில்லை.
இவ்வாறு நீண்ட காலமாக தீர்க்கப்படாமலுள்ள பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வினை வழங்குமாறு வலியுறுத்தி திங்கட்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அடிப்படையின்றி அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டணங்களை உடனடியாக நியாயமான கட்டணங்களாகக் குறைத்தல் , மின்சார சேவையாளர்கள் மற்றும் பாவனையாளர்களை பாதுகாக்கும் வகையில் செயற்படல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதற்கமைய திங்கட்கிழமை 12 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 6000இற்கும் அதிக தொழிற்சங்க உறுப்பினர்கள் விடுமுறையை அறிவித்து முற்பகல் 10.30 மணியளவில் லங்விம பிரதான அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு எதிர்ப்பினை வெளியிடவுள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.