பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட பௌத்த பிக்குகள் உள்ளிட்டோர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கால வரையறையின்றி மூடப்பட்டிருந்த பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தினை மீள திறக்குமாறு வலியுறுத்தி கடந்த வாரம் கல்வி அமைச்சிற்குள் நுழைந்த இவர்களால் அங்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு இன்று (27) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று திங்கட்கிழமை இவர்கள் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.