வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் போதைப்பொருள் கைமாறுவதாக வவுனியா விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் வவுனியா பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு பொலிஸ் பரிசோதகர் ரிஸ்வி தலமையிலான பொலிஸ் பிரிவினர் இன்று அதிகாலை திடீர் சோதனை நடவடிக்கையை மருதங்கேணி பகுதியில் முன்னெடுத்தனர்.
இதன்போது, போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தைச் சேர்ந்த 36, 35 ஆகிய வயதுடைய இரு நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து 30 கிலோ 500 கிராம் கேரள கஞ்சாவும் மீட்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா ஆகியவை மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்புப் பொலிஸ் பிரிவினருடன் இணைந்து மருதங்கேணி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அண்மைக்காலமாக வவுனியா விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் வவுனியா பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்புப் பொலிஸ் பிரிவினருடன் இணைந்து பல திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.