இங்கிலாந்து கார்ன்வால் மாகாணத்தில், இந்த ஆண்டிற்கான ஜி-7 கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தும் கலந்து கொண்டார். அங்கு வந்திருந்த பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் அவர்களது மனைவிகளுடன் பேசி மகிழ்ந்த ராணி எலிசபெத், அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
ராணி எலிசபெத்தின் கணவர் ஃபிலிப் அண்மையில் காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு, குடும்பத்துடன் இங்கிலாந்து ராணி கலந்து கொள்ளும் முதல் நிகழ்வாக ஜி-7 உச்சிமாநாட்டின் நிகழ்ச்சி அமைந்தது. அங்கு அவரை சந்தித்து பேசிய ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், இங்கிலாந்து ராணியை நேரில் சந்தித்து பேசியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என்று கூறினார்.
இதனையடுத்து ராணி எலிசபெத் விடுத்த அழைப்பின் பேரில், இங்கிலாந்தில் உள்ள வின்ட்சர் மாளிகையில் நடைபெறும் தேனீர் விருந்தில் கலந்து கொள்வதற்காக அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் இருவரும் வருகை தந்தனர். அவர்கள் இருவருக்கும் இங்கிலாந்து ராணியின் பிரத்யேக காவல் படையினர் சார்பில் அரச மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன் பின்னர் இருவரையும் ராணி எலிசபெத் வரவேற்று தேனீர் விருந்திற்கு அழைத்துச் சென்றார். இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜோ பைடன், ராணி எலிசபெத் தன்னிடம் ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் குறித்து கேட்டறிந்ததாக தெரித்துள்ளார். மேலும் ராணியின் கனிவான பேச்சும், நடத்தையும் தனது தாயை நினைவுபடுத்தியதாகவும் அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.