வாஷிங்டன்: அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை இன்றி சிறு வயது முதல் டீன்ஏஜ் பருவம் வரை அங்கேயே வளர்ந்த, இந்தியர்கள் உட்பட 2 லட்சம் வெளிநாட்டு இளம் தலைமுறையினர், 21 வயதை எட்டிய பிறகு நாடு கடத்தப்படும் சூழலில் உள்ளனர்.
அமெரிக்காவில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு நிரந்தர குடியுரிமைக்கான அனுமதி வழங்க கிரீன் கார்டு தரப்படுகிறது. பணி நிமித்தமாக அமெரிக்கா சென்ற இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் இன்னமும் கிரீன்கார்டுக்காக விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். பல இந்தியர்களின் குழந்தைகள் சிறு வயதிலேயே அமெரிக்கா சென்று, அங்கு பெற்றோர்களின் விசா மூலமே தங்கி பள்ளி, கல்லூரி படிப்பை தொடர்கின்றனர்.
இப்படி நிரந்தர குடியுரிமை இல்லாத வெளிநாட்டு இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள், அமெரிக்க குடியேற்றத்துறை சட்டப்படி, 21 வயதை எட்டியதும் அவரவர் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்படுவார்கள். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது சிறுவயதிலேயே அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக குடியேறுபவர்கள், வளர்ந்த பின்னர் அமெரிக்க நிறுவனங்களில் பணி புரிவதற்கான அனுமதி அளிக்கப்பட்டது. குழந்தை குடியேற்றவாசிகளுக்கான நிறுத்தி வைக்கப்பட்ட நடவடிக்கை (டிஏசிஏ) என்று அழைக்கப்படும் இந்த சட்டத்தை அடுத்து வந்த அதிபர் டிரம்ப் ரத்து செய்தார். இதனால், முறையான ஆவணங்கள் இருந்தும், இல்லாமலும், குடியுரிமை இல்லாத, இந்தியர்கள் உட்பட 2 லட்சம் வெளிநாட்டு இளைஞர்கள், இளம்பெண்கள் 21 வயதை தாண்டியதும் நாடு கடத்தப்படும் நிலையில் உள்ளனர்.
அவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்கள் தொடர்ந்து அமெரிக்காவிலேயே நிரந்தரமாக தங்கி பணிபுரியவும் நடவடிக்கை எடுக்க ‘இம்ப்ரூவ் த ட்ரீம்ஸ்’ என்ற அமைப்பு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 21 வயதுக்குப் பின் நாடு கடத்தப்படும் நிலையில் உள்ள பல இளைஞர்கள், இளம் பெண்கள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் வெள்ளை மாளிகையில் உள்ள பைடன் அரசு நிர்வாக உயர் அதிகாரிகளையும், அமெரிக்க நாடாளுமன்ற மற்றும் செனட் அவை எம்பிக்களையும் கடந்த ஒருவாரமாக நேரில் சந்தித்து பல்வேறு மனுக்களை அளித்து மன்றாடி வருகின்றனர்.
டிஏசிஏ சட்டத்தை மீண்டும் கொண்டு வருவதோடு, அமெரிக்காவிலேயே தாங்கள் தொடர்ந்து வாழ வழி வகுக்க வேண்டும், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே இந்த அமைப்பின் குறிக்கோளாக உள்ளது. இதற்கு உதவுவதாக பல்வேறு எம்பி.க்கள் தெரிவித்துள்ளதாக இந்த அமைப்பின் உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
- நாடு கடத்தலை எதிர்கொண்டுள்ள பெரும்பாலான இந்திய இளைஞர்கள் 5 வயது முதல் அமெரிக்காவில் வசித்து வருபவர்கள்
- இவர்கள் சுமார் 12 ஆண்டுகள் அங்கு வசித்துள்ளனர்.
- அமெரிக்காவே தங்களின் தாய் வீடு, அங்கிருந்து வெளியேற்றக் கூடாது என்பதே அவர்களின் கோரிக்கையாகும்.