அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முன்னறிவிப்பில்லாத திடீர் பயணம் ஒன்றை நேற்று முன்தினம் (20) உக்ரேன் நாட்டுக்கு மேற்கொண்டிருந்தார்.
இதன்போது உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கியைச் சந்தித்து அவர் கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன், போரில் உயிரிழந்த உக்ரேன் வீரர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து பைடன் மரியாதையும் செலுத்தியுள்ளார்.
பீரங்கி வெடிபொருட்கள், கவச எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் வான் கண்காணிப்பு ரேடார்கள் உள்ளிட்ட 500 மில்லியன் டொலர் மதிப்புள்ள இராணுவ உதவிகளை உக்ரேனுக்கு வழங்குவதாகவும் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.
இந்தச் செய்தி தற்போது உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்துள்ளதுடன், ரஷ்யா ஜனாதிபதி விளாதிமிர் பூட்டினுக்கு அவர் இதன்மூலம் ஒரு செய்தி அனுப்பியுள்ளார் என உலக அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்து வருகின்றர்.
நேட்டோ படையுடன் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ரஷ்யா கடந்த ஒரு வருட காலமாக உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
படம் : Al Jazeera