பெரும்பாலானவர்களை பாதிக்கும் நாட்பட்ட ஒற்றைத்தலைவலி பாதிப்பிற்கு ‘கிரீன் லைட் தெரபி’ என்ற புதிய சிகிச்சை அறிமுகமாகி இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
உலக அளவில் ஒரு பில்லியன் மக்கள் ஒற்றைத்தலைவலி பாதிப்பிற்குள்ளாகியிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு பல வகைகளில் நிவாரணம் பெற்று வந்தாலும், இதன் பாதிப்பு இன்றும் நீடிக்கிறது.
மன அழுத்தம், கோபம், பதற்றம் போன்ற மனோவியல் காரணங்களாலும் சோர்வு, தூக்கமின்மை, தொலைதூரப் பயணம், மாதவிடாய் சுழற்சியில் சமச்சீரின்மை போன்ற உடலியல் பிரச்சனைகளாலும் உணவு விடயத்தில் கட்டுப்பாடு இல்லாமல் நடந்து கொள்வதாலும், கோப்பி, தேநீர், சொக்லெட் மற்றும் பால்மா பொருட்கள் போன்ற காரணங்களாலும் ஒற்றைத் தலைவலி பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் விவரிக்கிறார்கள்.
மேலும் திடீர் தலைவலி, நாட்பட்ட தலைவலி, குமட்டல், கண் பார்வையில் மாற்றம், கால் மூட்டுகள் மற்றும் கழுத்துப் பகுதிகளில் ஊசியால் குத்துவது போன்ற உணர்வு, உணவின் மணத்தை உணர இயலாத தன்மை என பல்வேறு அறிகுறிகளை, நாட்பட்ட மற்றும் தற்காலிக ஒற்றை தலைவலியின் அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாம்.
இத்தகைய பாதிப்பிற்கு நடைமுறையில் பல்வேறு நிவாரண சிகிச்சைகள் இருப்பினும், தற்போது ‘கிரீன் லைட் தெரபி’ என்ற சிகிச்சை, நாட்பட்ட ஒற்றைத் தலைவலி பாதிப்பிற்கு முழுமையான நிவாரணம் வழங்குவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இத்தகைய சிகிச்சையை நாட்பட்ட ஒற்றைத்தலைவலி பாதிப்புக்குள்ளானவர்கள் பெறும் பொழுது, இத்தகைய பாதிப்பிலிருந்து அவர்கள் 50 சதவீதத்திற்கும் மேல் குணமடைவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
டொக்டர் கோடீஸ்வரன்