கொரோனா வைரஸை எதிர்கொள்ள தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ‘வைகைப்புயல்’ வடிவேலு ஐந்து லட்ச ரூபாய் நிதியை முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து நேரில் வழங்கினார்.
கொரோனா தொற்றுப் பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.
இந்த வகையில் ‘வைகைப்புயல்’ வடிவேலு இன்று முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களை சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து ஐந்து லட்சம் ரூபாய் நிதியை நன்கொடையாக வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது,
‘ முதலமைச்சர் மு க ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தேன். அவரை சந்தித்தது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக எளிமையாக இருக்கிறார். குடும்பத்தில் ஒரு நபராக நினைத்து என்னிடம் பேசினார்.
முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஐந்து லட்ச ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளேன். ஆட்சிக்கு வந்த இரண்டு மாதத்தில் உலகமே உற்றுப் பார்க்கும் வகையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கொரோனாவைக் கட்டுப்படுத்தியுள்ளார்.
இது மக்களுக்கு பொற்காலம். கருணாநிதி இருந்திருந்தால் இந்த ஆட்சியை கண்டு பெருமை அடைந்திருப்பார். தமிழக முதலமைச்சரே தெருத்தெருவாக சென்று மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார்.
முகாம் அமைத்து, வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். யார் மனதும் புண்படாமல் ஒவ்வொரு திட்டங்களும் செயல்படுத்தி வருகிறார். அனைவரும் தாமாக முன்வந்து தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.
ராம்நாடு, ஒரத்தநாடு என ஏராளமான நாடு இருக்கும்பொழுது திடீர்னு கொங்கு நாடு ஒரு சப்ஜெக்ட். நல்லா இருக்கும் தமிழ்நாட்டை எதுக்கு பிரிக்க வேண்டும்? நாடு.. நாடு. என தனித்தனியாக பிடித்தால் என்னாவது..! நான் அரசியல் பேசவில்லை. இதெல்லாம் பேசும் போது தலை சுத்துது…’ என்றார்.