போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் நேற்றும் காஷ்மீர் எல்லைபகுதிக்குள் தாக்குதல் நடத்தியது. அப்போது 40 இந்திய நிலைகள், 24 கிராமங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ளது. எனினும், இதனை மீறி இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது.
முதலில் இந்திய பாதுகாப்பு நிலைகளை மட்டுமே குறிவைத்து தாக்கி வந்த பாகிஸ்தான் ராணுவம் கடந்த 2 வாரங்களாக இந்திய எல்லையோர பகுதிகளில் வசிக்கும் கிராம மக்களை அச்சுறுத்தும் விதமாக அவர்களது குடியிருப்புகள் மீதும் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
எல்லையோர பகுதிகளில் வசிக்கும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமவாசிகள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்திய ராணுவம், பாகிஸ்தான் ராணுவத்துக்கு தக்க பதிலடியையும் கொடுத்து வருகிறது. இருந்தபோதிலும் பாகிஸ்தானின் வால்தனம் அடங்கியதாகத் தெரியவில்லை. நாளுக்கு நாள் எல்லையில் புதிய பகுதிகளை குறி வைத்து தாக்கத் தொடங்கி இருக்கிறது.