இலங்கையில், பலத்த மழை காரணமாக புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலச் சரிவில் புதையுண்ட 192 தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் உயிரிழந்திருப்பார்கள் என அஞ்சப்படுகிறது.
அந்த நாட்டின் மலைப்பாங்கான பதுளை மாவட்டத்திலுள்ள, மீரியபெத்தை தேயிலைத் தோட்டத்தில் புதன்கிழமை ஏற்பட்ட நிலச் சரிவில், தோட்டத் தொழிலாளர்களின் 120 வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டன.
பெரும்பாலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 192 தொழிலாளர்கள் இதில் சிக்கியுள்ள நிலையில், அவர்களை இனியும் உயிருடன் மீட்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர வியாழக்கிழமை கூறுகையில், “”நிலச் சரிவு ஏற்பட்ட இடத்தை நேரில் சென்று பார்வையிட்டேன். அங்கே யாரையும் உயிருடன் மீட்க முடியும் என எனக்குத் தோன்றவில்லை” என்று தெரிவித்தார்.
ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், “”இங்குள்ள வீடுகளில் கான்க்ரீட் அமைப்புகள் எதுவும் இல்லை என்பதால், அதன் இடிபாடுகளுக்கு இடையில் காற்று புகுந்து, சரிவுக்குள் சிக்கியவர்கள் சுவாசித்து உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்பில்லாத நிலை உள்ளது” என்றார்.
வீடுகளை இழந்த 817 பேர் அம்பிடிகாண்டா, கொஸ்லாந்த ஆகிய நகரங்களிலுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
தேசிய கட்டட ஆய்வு அமைப்பின் ஐந்து குழுக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. தொடர்ந்து பெய்து வரும் மழையால் மீட்புப் பணிகள் தடைபட்டு வருகின்றன.
இதற்கிடையே, நிலச் சரிவில் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோருக்கு உதவ இந்திய முன்வந்துள்ளது.
இதுகுறித்து இலங்கைக்கான இந்தியத் தூதர் ஒய்.கே. சின்ஹா, இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரிûஸ புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
நிலச் சரிவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகளில் உதவியளிக்கத் தயார் என்று அப்போது சின்ஹா தெரிவித்தார்.
இந்த நிலச் சரிவால் அதிக உயிர்ச் சேதம் ஏற்பட்டிருப்பதற்கு மீரியபெத்தை தேயிலைத் தோட்ட நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என இலங்கை அரசு குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து, தோட்டத் தொழில் துறை அமைச்சர் மஹிந்த சமரசிம்மா வியாழக்கிழமை கூறியதாவது:
மீரியபெத்தையில் நிலச் சரிவு ஏற்படும் என 2011-ஆம் ஆண்டிலேயே தேயிலைத் தோட்ட நிர்வாகத்தை அரசு எச்சரித்திருந்தது. அந்த எச்சரிக்கையை ஏற்று, தோட்ட உரிமையாளர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தால், அதிக உயிர்ச் சேதத்தைத் தவிர்த்திருக்கலாம் என்றார் அவர்.