இந்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இன்றும், நாளையும் இலங்கையில் மேற்கொள்ள உள்ள, அரசியல் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு, அந்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திஉள்ளது.
இலங்கை தமிழர்களுக்கு சம அதிகாரம் அளிக்க வகை செய்யும், அந்நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தின், 13வது பிரிவை முழுமையாக செயல்படுத்துவது தொடர்பாக, அந்நாட்டு அரசியல் தலைவர்களிடம் அஜித் தோவல் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.கொழும்பு நகரில் நடைபெறும், சர்வதேச கடல் எல்லை பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் பங்கேற்க சென்று உள்ள அஜித் தோவல், இலங்கை அரசுடன் பேசவுள்ள அம்சங்கள்:
*இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, கொழும்பு துறைமுகத்தில், சீன நீர்மூழ்கி கப்பல்களுக்கு அனுமதி அளித்த விவகாரம்.
*இலங்கை தமிழர் பிரச்னை
*இலங்கை கடற்படையால், இந்திய மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படும் விவகாரம்
*இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசுகளுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க வலியுறுத்தல்
சந்திரிகாவுடன் பேச்சு:இம்மாதம் 8ல் நடைபெற உள்ள இலங்கை அதிபர் தேர்தலில், அதிபர் ராஜபக் ஷேவை எதிர்த்து போட்டியிடும், ஐக்கிய தேசிய கட்சியின் மைத்ரிபாலா ஸ்ரீசேனாவையும், முன்னாள் பிரதமர் சந்திரிகா குமாரதுங்காவையும், இன்று அஜித் தோவல் சந்தித்து பேசுகிறார்.
சந்திரிகா குமாரதுங்கா, இந்திய தலைவர்களுக்கு நன்கு பரிட்சயமானவர்; ஆனால், மைத்ரி பாலா ஸ்ரீசேனாவுக்கு இந்திய தலைவர்களுடன் பழக்கம் கிடையாது என்ற நிலையில், அஜித் தோவல், இந்த இரு தலைவர்களையும் சந்திக்க உள்ளது, அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
*தமிழ் தேசிய கூட்டணி கட்சித் தலைவர்களைசந்திக்கிறார்.
*முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களும், அஜித்தை சந்திக்கின்றனர்.
*அதன் பின், நாளை, அதிபர் ராஜபக் ஷே மற்றும் ராணுவ செயலர் கோதபய ராஜபக் ஷேவையும் சந்தித்து பேசும் தோவல், அங்கிருந்து மாலத்தீவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.