இலங்கையில் அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ராஜபக்சே மந்திரி சபையில் இடம்பெற்றிருந்த மேலும் ஒரு மந்திரி எதிரணிக்கு தாவினார். இது ராஜபக்சேவுக்கும் மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் வரும் 8-ந்தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. 3-வது முறையாக போட்டியிடும் ராஜபக்சே, வெற்றி பெற தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஆனால், மூன்றாவது முறையாக ராஜபக்சே அதிபர் தேர்தலில் வெற்றிபெறக் கூடாது என்று எதிர்க்கட்சியினர் ஒன்று சேர்ந்து ஒரே அணியில் திரண்டுள்ளன. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடும் மைத்ரிபாலா சிறீசேனாவுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. ஆளும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்களும் தங்களது மந்திரி பதவிகளைத் துறந்து வெளியில் வந்து எதிர்க்கட்சிக்கு ஆதரவு அளித்த வண்ணம் உள்ளனர். இதனால் ராஜபக்சேவின் கூடாரம் காலியாகி வருகிறது.
அந்த வரிசையில் இன்று உயர்க்கல்வி துறையின் துணை மந்திரியாக இருந்த நந்திமித்ர எகாநாயகே ஆளும் கூட்டணியை விட்டு வெளியேறி எதிர்க்கட்சியில் இணைந்தார். எதிரணிக்கு செல்லும் 25-வது ஆளுங்கட்சி எம்.பி. இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து நந்திமித்ர கூறும்போது, ‘‘நாட்டிற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவே அரசில் இருந்து வெளியேறுகிறேன்’’ என்றார்.
பெரும்பான்மையாக உள்ள புத்த சமூகத்தைச் சேர்ந்தவரான நந்திமித்ர வெளியேறியது, ராஜபக்சேவுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.