கடைசிக் கடிதத்தில்
கைக்கடிகாரம் வாங்கிவரச் சொன்னாய்
இறுதிச்சந்திப்பில்
இயக்கக் கதைகள் சொன்னாய்
இரவு முழுதும்
கட்டி அணைத்துக்கொண்டே தூங்கினாய்
அதுதான் முதலும் கடைசியும்…
விடிந்தும் விடியாத போது
கையசைத்துக்கொண்டே காட்டுக்குள் மறைந்தாய்
விம்மி வெடித்து அழுகையில்
“பேயா.. அழாதயடா
கொஞ்ச நாளில வீட்ட வருவன்
இஞ்ச இருந்து இப்ப போ
ஆமிக்காரன் வந்துருவான்” என்றாய்
பள்ளமடுச்சண்டையில்
விழுப்புண்ணடைந்தது முதலில் எனக்குத்தான் தெரியும்,
முகப்பருவைக்கூட நகத்தால் உடைக்காத நீ
எப்படித் தாங்கியிருப்பாய்..??
பாலைக்குழிச் சமரில்தானே
கூலிக்குத் துவக்குப்பிடித்த சிங்களவன்
உனக்கு குழிபறித்தான்
உன்னைத் துளைத்த இரும்புக்குண்டை
எந்த நெருப்பு உருக்கியிருக்கும்…?
யாருடைய கைகள் ரவைக்கோதில்
கரிமருத்தை நிரப்பியிருக்கும்..??
நம் நிலத்திற்கும் அந்தக்கைகளுக்கும்
என்ன தொடர்பு..??
சரி விடு
உன்னை போராளியென கொன்றார்கள்
நீ வாழ்ந்துகொண்டுதானிருக்கிறாய்
அவர்கள் கொன்றதால் ஆயிரமாண்டுகள் வாழப்போகிறாய்.
இருக்கட்டும்
எனக்கு என் அண்ணன் வேண்டும்
யார் கொடுப்பார்கள்…??
கட்டியணைக்கவும்
கண்ணீர்மல்கவும்
மலர்மாலைசூடவும்
தீபமேற்றி திளைக்கவும்
உன்பெயர் வருடிப்பார்க்கவும்
நடுகல்லிருந்ததே
அதையேன் சிதைத்தார்கள்…??
நிலத்தில் விதைத்ததை சிதைத்தீர்கள்
உதிரத்தில்
இதயத்தில்
உணர்வில் விதைத்ததை ……???????
ந.பிரதீப்