ரஷ்ய ஊடகங்களை வாசித்துப் புரிபவர்களுக்கு உண்மை புரியும். ரஷ்யாவில் உள்ள ஊடகங்களில் உக்ரைன் போர் குறித்த மேற்கத்தேய தகவல்கள் எவ்வாறு வெளியிப்படுகின்றன என்று அறிந்து கொள்ளலாம்.
மைக்கேல் கோர்பச்சேவ் தொடக்கிய ‘கிளாஸ்னோஸ்ட்’ மற்றும் ‘பெரெஸ்ட்ரோயிகா’ அரசியலால் சோவியத் வீழ்ச்சியானது அமேரிக்க உளவு திட்டத்தினால் நடந்தது. 1991- இல் சோவியத் யூனியனின் 3 பெரிய குடியரசுகளான ரஷ்யா, பெலாரஸ், உக்ரைன் தனித்தனி நாடுகளாயின. பின்னர் மேலும் 8 குடியரசுகளும் சுதந்திர நாடுகளாக பிரகடனம் செய்து கொண்டன. இதில் ரஷ்யாவுக்குப் பிறகு பெரிய நிலப்பரப்பு கொண்டது உக்ரைன். 6 இலட்சத்து 3 ஆயிரத்து 628 சதுர கிலோ மீட்டர்கள், 43.6 மில்லியன் மக்கள் தொகை கொண்டது உக்ரைன். ஐரோப்பாவில் மக்கள் தொகை அளவில் 8 ஆவது பெரிய நாடாகும் உக்ரைன்.
உக்ரேன் கருங்கடலுடன் ஒரு கடலோரத்தைக் கொண்டுள்ளது, இது துருக்கி மற்றும் ஐரோப்பாவின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது. 77% மக்கள் உக்ரேனிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், 17% ரஷ்ய வம்சாவளியினர் பெரும்பாலும் கிழக்கு மாகாணங்களில் உள்ளனர். உக்ரைனில் கனிமங்கள் மற்றும் பிற இயற்கை வளங்கள் குறிப்பாக யுரேனியம், நிலக்கரி, இரும்பு, தாது, இயற்கை எரிவாயு, மாங்கனீசு, உப்பு, எண்ணெய் கந்தகம், மரம் மற்றும் பாதரசம் போன்றவை நிறைந்துள்ளன.
சோவியத் யூனியன் சிதைந்த பிறகு, மேற்கத்திய உலகம் மகிழ்ச்சியடைந்தது மாத்திரமன்றி, அமெரிக்கர்கள் எந்த எதிர்ப்பும் இல்லாமல் ரஷ்யாவுக்கு எதிரான செயல்களை செய்ய இலகுவாக முடிந்தது. முன்னர் உக்ரைன் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்தது மற்றும் பல ‘குடியரசுகள்’ அதிலிருந்து பிரிந்த பின்னர் 1991 இல் சுதந்திரம் பெற்றது.
மேற்கத்திய உலகம் சோவியத் யூனியனின் வீழ்ச்சியைக் கொண்டாடியதுடன், உலகம் முழுவதும் கம்யூனிசத்தின் ‘முடிவு’ என்றும் மேற்குலக நாடுகளும் ஊடகங்களும் கொண்டாடித்தீர்த்தன.
இரண்டாம் உலகப்போரின் பின்னர் நேட்டோ என்ற அமைப்பு ஏப்ரல் 4, 1949- இல் 12 நாடுகள் உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்டது. பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஐஸ்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, ேநார்வே, போர்த்துக்கல், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நேட்டோ நாடுகள் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய காலத்தில் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் வைக்கப்பட்டிருந்த சோவியத் படைகளுக்கு எதிராக தங்கள் படையை உருவாக்கின.
பனிப்போர் அழுத்தத்தின் விளைவாக மேற்கு ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவுடன் ஒரு கூட்டணியை உருவாக்க நிர்ப்பந்தித்தது, இதனால் அவர்கள் ஐரோப்பாவில் ‘பாதுகாப்பாக’ இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இதற்கு நேட்டோ அவசியமா என்ற கேள்வியை யாரும் எழுப்பவில்லை.
துரதிர்ஷ்டவசமாக, அதற்குப் பிறகு, எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா போன்ற முன்னாள் சோவியத் யூனியனில் இருந்து தோன்றிய அனைத்து ‘சுதந்திர’ நாடுகளையும் நேட்டோ ஆக்ரோஷமாகப் பின்தொடர்ந்தது. சோவியத் கூட்டணியில் இருந்த மற்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ஹங்கேரி, போலந்து மற்றும் செக் குடியரசு, ஸ்லோவாக்கியா, பல்கேரியா, ஸ்லோவேனியா போன்ற நாடுகள் நேட்டோவின் ஒரு பகுதியாக மாற்றியது.
தற்போது நேட்டோ ரஷ்யாவை தொடர்ந்து சுற்றி வளைத்து வருகிறது. அப்போது அந்த நாட்டின் பாதுகாப்பு தொடர்பான உண்மையான மற்றும் நியாயமான அக்கறை உள்ளது, அது கவனிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி புட்டின் தன் பல உரைகளில் குறிப்பிட்டு வருகிறார். நேட்டோ படைகள் ஆங்காங்கே ரஷ்ய எல்லைகளில் நிறுத்தப்படுவது, ஏவுகணை தளம் அமைப்பது ரஷ்யாவின் பாதுகாப்புக்கு பங்கம் என்பதை ரஷ்ய மக்களும் உணர்கின்றனர். இது ரஷ்யாவை பொருளாதார ரீதியாகவும், அரசியல் -இராணுவ ரீதியாகவும் பலவீனமாக்கும்.
மேற்கத்திய நாடுகள் சோவியத் யூனியனின் ‘இறப்பை’ கண்டு மகிழ்ந்தபோது, மிகைல் கோர்பச்சேவை ‘மிகப்பெரிய’ அறிவுஜீவியாக உருவாக்கி, பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு அவரை அழைத்து, இறுதியில் சோவியத் யூனியனை சிதைத்ததற்காக அமைதிக்கான நோபல் பரிசை வழங்கின. ஆயினும் தற்போதைய மேற்குலகு புட்டினுடன் உடன்படாமல் அவரை இழிவாகப் பார்க்கலாம். ஆனால் அவருடைய தலைமையின் கீழ் ரஷ்யா இப்போது நம்பிக்கையுடனும் மிகவும் சக்திவாய்ந்ததாகவும் இருப்பதாகவுமே பல மேற்கத்தய அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஒவ்வொரு பெரிய நாடும் மற்ற நாடுகளின் பிரச்சினைகளிலும் சுரண்டல்களிலும் பங்கு வகித்துள்ளன. ஐரோப்பாவின் காலனித்துவ சக்திகள் உலகத்தை காலனித்துவப்படுத்துவதற்கான காரணங்களை தங்கள் சொந்த சாதனையாகக் கருதுகின்றன.
மேற்கண்ட காரணங்களினால் இப்போதய உக்ரேனிய போர் மூண்டுள்ளது. இப்போதய களச்சூழலில் பேச்சுவார்த்தைக்கான அழைப்பு வேலை செய்யாது. ஏனெனில் ஆட்சி மாற்றம் செய்யப்பட்டு ரஷ்ய சார்பு அரசாங்கம் கீவ்வில் நிறுவப்பட்டால் மட்டுமே ரஷ்யா தன் ஆக்ரோஷத்தை நிறுத்தும்.
ரஷ்ய ஜனாதிபதி புட்டின் செய்தது, ரஷ்யாவை நேட்டோ சுற்றி வளைப்பதில் இருந்து பாதுகாக்க முக்கியமானதாக இருக்கலாம். சுயமரியாதையுள்ள எந்த சக்தி வாய்ந்த நாடும் தனது எல்லையை எதிரிகள் சூழ அனுமதிக்காது என்பதே இப்போதைய சூழ்நிலை. இப்போதைக்கு தீர்வு பொருளாதாரத் தடை எவ்வித பாதிப்பையும் ரஷ்யாவிற்கு ஏற்படுத்தாது.
ரஷ்ய அரசு ஊடகங்கள் உக்ரைன் மீதான தாக்குதலை படையெடுப்பு, போர் என்றெல்லாம் குறிப்பிடாமல் சிறப்பு இராணுவ நடவடிக்கை என்றே குறிப்பிட்டு வருகின்றன. ஆனால் பல சர்வதேச, மேற்கத்தய ஊடகங்கள் அனைத்தும் ரஷ்ய படையெடுப்பு (Russian Invasion) என்றே குறிப்பிட்டு வருகின்றன.
ரஷ்ய விரோதப்போக்கு மேற்கத்திய ஊடக மனோபாவங்களில் ஊறிப் போயுள்ளது. அது உலகம் முழுதுமே பரவியுள்ளது எனலாம். அதற்கு நேர்மாறாக மேற்குலக ஊடகங்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக பிரசாரம் செய்து வருவதையும் பார்க்கிறோம்.
ஐங்கரன் விக்கினேஸ்வரா
நன்றி – தினகரன்