எதிர்வரம் ஜனாதிபதி தேர்தலில், யார் வேட்பாளராக போட்டியிட்டாலும் போதைப் பொருளை ஒழிப்பதாகவும் போதைபொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை வழங்குவதாகவும் உறுதிமொழியளிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று (18.08.2019), பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “கடந்த 25 ஆண்டுகளில் எனது அனுபவத்திற்கு அமைய யார் நல்லவர்? யார் திருடர்? என்று என்னால் கூற முடியும். கடந்த 5 தொடக்கம் 10 வருடங்களுக்கு உட்பட்ட காலப்பகுதியில் இருந்த அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதிகள் பலரும் எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டார்கள் என்று நான் நன்கு அறிந்து வைத்திருக்கிறேன்.
ஆனால் அமைச்சர் சஜித் பிரேமதாஸ போன்றவர்கள் அவ்வாறு அல்லர். எங்கள் அரசாங்கத்தில் இருக்கின்ற மிகவும் நியாயமான, மக்களின் நலன்கள் மீது அக்கறை கொண்டவர்தான் சஜித் பிரேமதாஸ. இதற்கு நல்ல உதாரணமாக, நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்றே பொலன்னறுவையிலும் ஏழை எளிய மக்கள் நலன் கருதி வீடமைப்பு திட்டங்களை ஏற்படுத்திக்கொடுத்திருப்பதை குறிப்பிடலாம். அதேவேளை, ஏனைய அரசியல் தரப்பினர் தொடர்பாக கதைப்பதற்கு நிறையவே இருக்கின்றது. தற்போது அதற்கு நேரம்போதாது என்றார்.
மேலும், எனது ஆட்சி காலத்தில் ஜனநாயகத்திற்கும் மனிதவுரிமைகளுக்கு அதிகமாக இடமளித்துள்ளேன். அதேபோன்று எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர்களும் இதற்கு உறுதியளிக்க வேண்டும்” என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடதக்கது.