ஆபாச பாடலை வெளியிட்டதாக கூறி சிம்பு, அனிருத் ஆகியோர் மீது தமிழகம் முழுவதும் புகார்கள் குவிந்து வருகிறது. போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் கடந்த வாரம் வக்கீல் கார்த்தி என்பவர் சிம்பு, அனிருத் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு வருகிற 30–ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில் சைதாப்பேட்டை 3–வது விரைவு நீதிமன்றத்தில் மேலும் 2 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. விருகம்பாக்கம் பகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் லட்சுமணன் என்கிற புதியவன் மற்றும் சாலிகிராமத்தைச் சேர்ந்த ஜெ.பிஷ்மி ஆகியோர் இதுதொடர்பான மனுவை இன்று தாக்கல் செய்தனர்.
அதில், ஆபாச பாடலை பாடி வெளியிட்ட குற்றத்துக்காக சிம்பு, அனிருத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிபதி பிரியா இந்த வழக்குகளை வருகிற 28–ந்தேதிக்கு ஒத்திவைத்தார். அன்று வழக்கு தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தப்படுகிறது.
சென்னை போலீஸ் இதற்கிடையே சிம்பு, அனிருத் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் 2 சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். தகவல் தொழில்நுட்ப சட்டம் 67, இந்திய தண்டனை சட்டம் 292 ஆகிய 2 சட்டப்பிரிவுகளில் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து சிம்பு, அனிருத் ஆகியோர் மீதான விசாரணையை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கூடுதல் கமிஷனர் நல்லசிவம் மேற்பார்வையில் துணை கமிஷனர் ஜெயக்குமார், கூடுதல் துணை கமிஷனர் வெங்கடாசலபதி, சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் சிம்பு மீதான வழக்கில் அடுத்தக்கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது பற்றிய நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதைத் தொடர்ந்து இன்று சிம்புவுக்கு எதிரான வழக்கில் புகார் மனுதாரர்களை அழைத்து இன்று சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். சிம்பு மீது புகார் அளித்து இருந்த பால் முகவர் சங்க தலைவர் பொன்னுசாமி மற்றும் அவரது மனைவி ஆகியோர் இதற்காக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு ஆஜராக இன்று வந்தனர்.
அவர்களிடம் ஆபாச பாடல் குறித்தும், அதன் காரணமாக அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டது குறித்தும் விரிவாக கேட்டு வாக்குமூலம் பதிவு செய்தனர். இதேபோல ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த கலைச்செல்வி என்பவரும் சிம்பு மீது புகார் அளித்து இருந்தார். அவரிடமும் இன்று விசாரணை நடத்தப்பட்டது.
இதன் பின்னர் சிம்பு, அனிருத் ஆகியோரிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக அவர்களுக்கு முறைப்படி சம்மன் அனுப்ப முடிவு செய்து உள்ளனர். இந்த சம்மன் சிம்பு, அனிருத் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கப்படுகிறது.
சிம்புவும், அனிருத்தும் விசாரணைக்கு ஆஜராகும் பட்சத்தில் அவர்களிடம் ஆபாச பாடல் குறித்து பல்வேறு கேள்விகளை கேட்கவும் சைபர் கிரைம் போலீசார் முடிவு செய்துள்ளனர். தகவல் தொழில்நுட்ப சட்டம் 67–ன்படி பாலுணர்வை தூண்டும் வகையில் இணையதளங்களில் கருத்துக்களை பரப்புவது குற்றமாக கருதப்படுகிறது.
இதேபோல இந்திய தண்டனை சட்டம் 292–ம் பாலுணர்வை தூண்டுவதற்கு எதிரான சட்டப்பிரிவு ஆகும். இதற்கிடையே பால் முகவர் சங்கம் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று மீண்டும் ஒரு புகார் அளிக்கப்பட்டது.
அதில், ‘‘சிம்பு, அனிருத் ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த சங்க தலைவர் பொன்னுசாமி, போலீசார் சிம்பு, அனிருத் மீது சாதாரண பிரிவில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர் என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, ‘‘தனுஷ் நடித்த தங்கமகன் படத்தில் பெண்களை காம பொருளாக சித்தரித்து உள்ளது கண்டிக்கத்தக்கது’’ என்றார்.