எம் மகன் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய திருமுருகன் 13 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படும் இந்த திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை நடிக்கவைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெட்டி ஒலி சீரியல் மூலம் பிரபலமானவர் இயக்குனர் திருமுருகன். இவர் பரத், கோபிகா மற்றும் நாசர் நடிப்பில் உருவான எம் மகன் படம் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் குடும்பங்கள் கொண்டாடிய வெற்றிப் படமாக அமைந்தது.
இதையடுத்து மீண்டும் பரத்தை வைத்து முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தை 2008-ம் ஆண்டு இயக்கினார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. இதனால் மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பி நாதஸ்வரம் உள்ளிட்ட தொடர்களை இயக்கினார்.
இந்நிலையில் இயக்குனர் திருமுருகன் தற்போது மீண்டும் படம் இயக்க தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.