Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா இளம் நடிகைகளுக்கு அமீரின் அர்த்தமுள்ள அறிவுரை

இளம் நடிகைகளுக்கு அமீரின் அர்த்தமுள்ள அறிவுரை

3 minutes read

தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் இளம் நடிகைகளுக்கு, தனித்துவமிக்க இயக்குநரான அமீர், அர்த்தமுள்ள- ஆழமான அறிவுரையை வழங்கியிருக்கிறார்.

அண்மையில் ‘நான் கடவுள் இல்லை’ திரைப்பட விழாவில் பங்குபற்றிய இயக்குநர் அமீர் நடிகைகளை பற்றி பேசுகையில், ” திரையுலகில் அறிமுகமாகி ஒன்றிரண்டு படங்களில் நடித்தவுடன் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட வேண்டும். 

இதுதான் நடிகைகளின் இலக்காக இருக்கிறது. இப்படியானதொரு இலக்கை நிர்ணயித்து கொள்ளவேண்டாம் என்று தான் நான் கேட்டுக் கொள்கிறேன். 

இத்தகைய எதிர்பார்ப்புடன் திரையுலகில் அறிமுகமாக வேண்டாம். உங்களுக்கு வழங்கப்படும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, உங்களது திறமையை வெளிப்படுத்துங்கள். படைப்புகளில் வெளிப்படும் உங்களின் திறமை தான், உச்ச நட்சத்திர நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை உருவாக்கித்தரும்.

வேறு சில நடிகைகள் கவர்ச்சியாக நடித்தால் உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து விடலாம் என எண்ணுகிறார்கள். இதுவும் தவறு. 

ஏனெனில் உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்த நடிகைகள் தான் தற்பொழுது அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

நடிகை நயன்தாரா, முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நிறைய படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் அவர்களது நடிப்பில் வெளியான ‘அறம்’ என்ற படம் ஏற்படுத்திய பாதிப்பை வேறு எந்தப் படமும் ஏற்படுத்தவில்லை. 

அதனைத் தொடர்ந்து அவர்கள் கதையின் நாயகியாக நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ என்ற படமும் எதிர்பார்ப்பை விட கூடுதலான தாக்கத்தை ஏற்படுத்தியது.

என்னுடைய அலுவலகத்திற்கு ஒரு முறை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வருகை தந்தார். அவரிடம் , ”உங்களால் எப்படி இரண்டு குழந்தைக்கு தாயாக ‘காக்காமுட்டை’ படத்தில் நடிக்க முடிந்தது. 

தமிழ் திரை உலகில் ஊர்வசி, சாரதா, ஷோபா போன்றவர்களின் வரிசையில் நடிப்பு திறமையை வெளிப்படுத்த, தற்போது நடிகைகளே இல்லை. 

இதே அறிவுரையை ‘பருத்திவீரன்’ படத்தில் நடித்த பிரியாமணிக்கு சொன்னேன். அவர் அதை பின்பற்றவில்லை. உனக்கும் சொல்கிறேன் நீயாவது கேள்’ என சொன்னேன்.

ஆனால் நடிகைகளின் மனதில், ஏன் நாங்கள் கவர்ச்சியாக நடிக்க கூடாதா? கமர்சியல் படங்களில் நடிக்க கூடாதா? என்ற எண்ணம் எழுகிறது. 

அந்த எண்ணம் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு காலகட்டத்திலும் ரசிகர்களின் ரசனை மாறிக்கொண்டே இருக்கும். தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப ஒவ்வொரு நடிகைகளுக்கு ரசிகர்கள் இருப்பார்கள்.

இறுதியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிடம் உன் நடிப்பு திறமைக்கு ஏற்ற வாய்ப்புகளை பயன்படுத்தினால், திரை உலகில் முன்னேறலாம் என்றேன். 

இதை கேட்டபோது அவர் கோபமடைந்தார். அதன் பிறகு ஜீ 5 சிறந்த நடிகைக்கான விருது வழங்கும் விழாவில் அவரை சந்திக்கிறேன். ‘க / பெ ரணசிங்கம்’ என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வழங்கினேன். 

அப்போது அவரிடம் எம்முடைய அலுவலகத்தில் உன்னை சந்தித்த போது நான் என்ன கூறினேன்… இப்பொழுது நீ எந்த படத்திற்காக விருது வாங்குகிறாய்- என கேட்டேன். அப்போது அவர், ‘ஆமாம். சார் நீங்கள் சொல்வதுதான் முற்றிலும் சரி. நடித்தால் மக்கள் கொண்டாடுகிறார்கள்.’ என பதிலளித்தார்.

ஆகவே பட விழாக்களில் பங்குபற்றுவதற்காக வருகை தரும் நடிகைகள், திரையில் தோன்றுவதற்கு எதிர்மாறாக உடையணிந்து கலந்து கொண்டால், உங்களை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு கொண்டாடுவார்கள்.” என்றார்.

நடிகர் அமீரின் அறிவுரைக்கு தமிழ் திரை உலகிலுள்ள எந்த நடிகைகளும் சமூக வலைத்தளங்களில் கூட விமர்சிக்கவில்லை. இதனால் அமீரின் அறிவுரையில் உண்மையும், நேர்மையும் இருக்கிறது என திரையுலகினர் தெரிவிக்கிறார்கள். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More