கேரள அரசின் ஸ்டேட் அவார்டு கிடைத்திருப்பது உற்சாகமாக இருக்கிறது என்று நடன இயக்குனர் லலிதா கூறியிருக்கிறார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடன இயக்குநரான இருப்பவர் லலிதா ஷோபி மாஸ்டர். இவர் சூபியும் சுஜாதாவும் என்ற படத்திற்காக கேரளாவின் மாநில விருது பெற்றிருக்கிறார். கமல், விஜய், ஜோதிகா உள்ளிட்ட பல நட்சத்திரங்களை நடனத்திற்காக ஆட்டி வைத்தவர். இப்போது அட்லி இயக்கி வரும் ஷாருக்கான், நயன்தாரா நடிக்கும் படத்தில் இருவருக்கும் நடனம் லலிதாதான். விருது பெற்றது பற்றி கூறும்போது,
ஒரு படத்தில் ஹீரோ ஹீரோயின் நன்றாக நடனம் ஆடியிருந்தால் அதற்கு பின்னால் ஒரு நடன இயக்குநரின் உழைப்பு இருக்கிறது. இது அந்த நடிகர், நடிக்களுக்கும் தெரியும். ஆனால் ரசிகர்கள் சொல்லும் போது குறிப்பிட்ட நடிகர் நடிகைகளின் பெயரைச்சொல்லி சூப்பராக நடனம் ஆடினார்கள் என்றுதான் சொல்லுவார்கள். அது இயல்பான ஒன்றுதான்.
ஆனால் சம்மந்தப்பட்ட ஹிரோவோ ஹீரோயினோ எங்களை தனிப்பட்ட முறையில் அழைத்துப் பாராட்டுவார்கள். இதுதான் எங்களுக்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கும். அனுஷ்கா, ஜோதிகா ரெண்டுபேரும் வைர காதணி பரிசாக கொடுத்திருக்கிறர்கள். இப்போது கேரள அரசின் ஸ்டேட் அவார்டு கிடைத்திருப்பதில் இன்னும் உற்சாகமாக இருக்கிறது. விரைவில் ஒரு படத்தை டைரக்ட் பண்ணுவேன் என்றார் லலிதா.