நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘வட்டம்’ எனும் திரைப்படம்,ஜுலை 29ஆம் திகதியன்று டிஸ்னி ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.
‘மதுபான கடை’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘வட்டம்’. சிபி சத்யராஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அதுல்யா ரவி நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகை ஆண்ட்ரியா அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார். சமுத்திரக்கனி, சியாம் பிரசாத், நட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருக்கிறார். திரில்லர் தொடர்பில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ் ஆர் பிரபு மற்றும் எஸ் ஆர் பிரகாஷ் பாபு ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” இன்றைய சூழலில் நாம் அதிகமாக திரில்லர் தொடர்பிலான படங்களை பார்த்து பார்த்து அதனை விரும்ப தொடங்கி விட்டோம். ஆனால் இந்த சமூகத்தில் அதைவிட பன்மடங்கு த்ரில்லிங்கான தருணங்கள் இருக்கிறது. அவை இந்தப் திரைப்படத்திலும் இடம் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு குற்ற செயலுக்கும் பின்னணியில் ஆண்களுக்கான ஒரு பார்வை இருக்கும். அதே தருணத்தில் பெண்களுக்கான ஒரு பார்வையும் இருக்கும். இரண்டு பார்வைகளையும் இந்த திரைப்படம் சொல்ல முயற்சி செய்திருக்கிறது.” என்றார்.
‘வட்டம்’ திரைப்படம் கோவை மாநகரை கதை களப் பின்னணியாக கொண்டு உருவாகி இருப்பதால், அந்த மண்ணின் மைந்தர்களான சிபி சத்யராஜ், அதுல்யா ரவி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். புரட்சி நடிகர் சத்யராஜின் புதல்வரான சிபி சத்யராஜ்,’ இயக்குநர் கமலக்கண்ணனை டிஜிட்டல் யுக மணிவண்ணன்’ என குறிப்பிட்டிருப்பதாலும், ‘வட்டம்’ தத்துவவியலை பேசும் படம் என்று குறிப்பிட்டிருப்பதாலும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.