நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘வாரிசு’ திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்குபற்றிய நடிகர் விஜய் ‘என் நெஞ்சில் குடியிருக்கும்…’ என பேசத் தொடங்கியதும் ரசிகர்களின் ஆரவாரம் விண்ணை பிளந்தது.
தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘வாரிசு’.
இந்த படத்தை ‘தோழா’ பட இயக்குநர் வம்சி இயக்கியிருக்கிறார். குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி தயாராகியிருக்கும் இந்த படத்துக்கு எஸ். தமன் இசையமைத்திருக்கிறார்.
படத்தின் இசை வெளியீடு சென்னை நேரு விளையாட்டு உள்ளரங்கில் ரசிகர்களின் முன்னிலையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் விஜய்யும் பங்குபற்றினார்.
இதன்போது விஜய் பேசுவதற்கு முன் அரங்கத்தில் அவர் தோன்றியதும், ரசிகர்களின் கரவொலி விண்ணை பிளந்தது.
அவரது பேச்சில் தத்துவம், நகைச்சுவை, யதார்த்தம் இருக்கும். அவற்றை கைதட்டி ரசிக்கும் ரசிகர்கள் தான் அவரின் உச்சகட்ட போதை.
இந்த நிகழ்வில் ‘வாரிசு’ திரைப்படத்தின் கதை, படப்பிடிப்புத்தள அனுபவங்கள், பேச்சின் முத்தாய்ப்பாக ஒரு குட்டிக்கதை, ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க இரண்டாவது குட்டிக்கதை, ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில், செல்ஃபி என அனைத்து அம்சங்களையும் பகிர்ந்துகொண்டு ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.
விஜய்யின் பேச்சை கேட்ட விமர்சகர்கள்,
”விஜய் வழக்கத்தை விட கூடுதல் இயல்பாகவும் ஜாலியாகவும் அதே தருணத்தில் சமயோசிதமாகவும் பேசி அனைவரையும் கவர்ந்திருக்கிறார். அவருடைய உடல் மொழி சற்று புதிதாக இருந்தது” என்றனர், விமர்சகர்கள்.
அத்துடன், ”அவர் ‘வாரிசு’ என இரண்டு முறை அழுத்தம் கொடுத்து பேசியது ‘வாரிசு அரசியல்’ என பலரையும் நினைக்க வைத்தது. அதேபோல் அவருடைய திரையுலக போட்டியாளர் 90களில் உருவானார் என்று பேசும்போது, தொடக்கத்தில் அவர் ‘தல’யைத் தான் குறிப்பிடுகிறார் என அனைவரும் நினைக்க, அவருடைய போட்டியாளர் அவர்தான் என விவரித்தபோது அனைவரும் மெய் மறந்து கைதட்டினர்” எனவும் குறிப்பிட்டனர்.
மேலும், ”விஜய் தன் பாதையில் தெளிவாகவும் உறுதியாகவும் நடை போடுகிறார்” எனவும் தெரிவித்தனர்.
‘என் நெஞ்சில் குடியிருக்கும்..’ என ஹேஷ்டேக்கை க்ரியேட் செய்து, அரங்கத்தில் ரசிகர்களுடன் எடுத்த செல்ஃபி வீடியோவை அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்தது, ரசிகர்கள் செய்கிற ரத்ததானம் எனும் நற்பணியை மனம் திறந்து பாராட்டியது, ரசிகர்களை மட்டுமல்ல பாமர மக்களையும் கவர்ந்திருக்கிறது.
இதன் காரணமாக விஜயின் ‘வாரிசு’ திரைப்படத்துக்கு நேர்நிலையான அதிர்வலை உண்டாகி இருப்பதாகவும், இது படத்தின் முதல் நாள் வசூலை அதிகரிக்கும் என்றும், படத்தின் ஒட்டுமொத்த வசூலும் கூடும் என்றும் திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.
இதனிடையே விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெற்றிருப்பதாகவும், அந்த ஐந்து பாடல்களில் ‘அம்மா’ பாடல் தான் விஜய்யின் ஃபேவரிட் என்பதும் குறிப்பிடத்தக்கது.