இயக்குநரும், நடிகருமான அமீர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘உயிர் தமிழுக்கு’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஓட்டு கேட்டு ஓடி வருவான்..’
எனத் தொடங்கும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது.
இதனை நாம் தமிழர் எனும் அரசியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், அவருடைய இணையப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆதம் பாவா இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘உயிர் தமிழுக்கு’. இதில் இயக்குநரும், நடிகருமான அமீர் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சாந்தினி தமிழரசன் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் நடிகர்கள் மாரிமுத்து, இமான் அண்ணாச்சி, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேவராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார்.
அரசியலை நையாண்டித்தனத்துடன் விவரித்திருக்கும் இந்த திரைப்படத்தை மூன் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதம் பாவா தயாரித்திருக்கிறார்.
இதனை பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவருடைய வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உலகம் முழுவதும் வெளியிடுகிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. ‘ஓட்டு கேட்டு ஓடி வருவான் நம்பிடாதீங்க.. காச நீட்டி ஆச காட்டுவான் வாங்கிடாதீங்க…’ எனத் தொடங்கும் பாடலை பாடலாசிரியரும், கவிஞரும், அரசியல்வாதியுமான சிநேகன் எழுத, பின்னணி பாடகர் குரு பாடியிருக்கிறார். இந்த பாடலில் ‘சாயம் போகுதே சனநாயகம்.. அடிச்சு கிழிக்குதே பண நாயகம். ..’ என்ற பாடல் வரி இன்றைய அரசியல் யதார்த்தத்தை பட்டவர்த்தனமாக உணர்த்துவதை இசை ஆர்வலர்கள் வெகுவாக ரசிக்கிறார்கள்.