தமிழ் திரையுலகின் சிறந்த குணசித்திர நடிகரான விவேக் பிரசன்னா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘பருந்தாகுது ஊர் குருவி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ மதயானைக்கூட்டம்..’ எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழக மாநகரான கோயம்புத்தூரில் நடைபெற்ற விழா ஒன்றில் கல்லூரி மாணவர்கள் இணைந்து வெளியிட்டனர்.
அறிமுக இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘பருந்தாகுது ஊர் குருவி’. இதில் நடிகர்கள் நிஷாந்த் ரூசோ, விவேக் பிரசன்னா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள்.
இவர்களுடன் மும்பை மொடலிங் மங்கை காயத்ரி ஐயர், ‘ராட்சசன்’ வினோத் சாகர், அருள் டி. சங்கர், கோடங்கி வடிவேல், மறைந்த நடிகர் ஈ. ராமதாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அஸ்வின் நோயல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சித் உன்னி இசையமைத்திருக்கிறார். சர்வைவல் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைட்ஸ் ஆன் மீடியா எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சுரேஷ், சுந்தர கிருஷ்ணா, வெங்கி சந்திரசேகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” அரசியல்வாதிகள், காவல்துறையினர், கேங்ஸ்டர் ஆகிய மூவரால் தேடப்படும் இளைஞன் ஒருவனுக்கும், மற்றொரு இளைஞனுக்கும் அடர்ந்த வனப் பகுதியில் நட்பு உருவாகிறது.
இதனைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களை விறுவிறுப்பான திரில்லர் திரைக்கதையாக விவரிக்கப்பட்டிருக்கிறது. இந்த கதை ஒரே நாளில் நடக்கும் நிகழ்வுகளாக அமைக்கப்பட்டிருக்கிறது. வஞ்சகமும், சூழ்ச்சியும் ஒருபோதும் நிலைக்காது என்பதனை உணர்த்தும் வகையில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது.” என்றார்.