நட்சத்திர வாரிசும், நட்சத்திர நடிகருமான விக்ரம் பிரபு கதையின் நாயகனாக ஆதிக்கம் செலுத்தி நடித்திருக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை எஸ் பி சினிமாஸின் கிஷோர் வெளியிட, படக் குழுவினர் பெற்றுக் கொண்டனர்.
அறிமுக இயக்குநர் கார்த்திக் அத்வைத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’. இதில் விக்ரம் பிரபு, வாணி போஜன், தனஜெயா, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாகர் பாடலுக்கு இசையமைத்திருக்கிறார். சன்னி -சாகேத் ஆகிய இருவர் பின்னணி இசை அமைத்திருக்கிறார்கள்.
பார்வை திறன் குறைபாடுடைய நாயகனின் வாழ்க்கையை மையப்படுத்தி எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கார்த்திக் மூவி ஹவுஸ் என்ற பட நிறுவனம் சார்பில் இயக்குநர் கார்த்திக் அத்வைத் தயாரித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தை எஸ்பி சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சங்கர் மற்றும் கிஷோர் இணைந்து வெளியிடுகிறார்கள்.
படத்தைப் பற்றி ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் பேசுகையில், “நாயகன் பார்வை குறைபாடு பிரச்சனை உள்ளவர். அவருக்கும் அரசியல்வாதி ஒருவருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. அரசியல்வாதி, நாயகனின் குடும்பத்தை அழித்து விடுவதாக எச்சரிக்கிறார். அவரிடமிருந்து குடும்பத்தினரை காப்பாற்றி, அரசியல்வாதியான வில்லனை நாயகன் வீழ்த்தினாரா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் கதை. இப்படத்தின் படப்பிடிப்பு அதிக நாட்கள் சண்டை காட்சிகளுக்காக படமாக்கப்பட்டது. அதிலும் உச்சகட்ட காட்சி முற்றிலும் கண்ணாடி சூழ்ந்திருக்க நடைபெறுகிறது. இது வித்தியாசமாக அமைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களை கவரும். இப்படத்தில் எட்டு சண்டை காட்சிகள் இடம் பிடித்திருக்கிறது. அனைத்து சண்டை காட்சிகளிலும் விக்ரம் பிரபு கூடுதல் கவனத்துடன் நடித்திருக்கிறார். படத்தில் பார்வை குறைபாடு என்பது குறை அல்ல என்றும், அன்பு செலுத்தாமல் இருப்பது தான் குறை என்றும் விவரிக்கப்பட்டிருப்பதால் பார்வையாளர்களை பாயும் ஒளி நீ எனக்கு அனைத்து தரப்பினரையும் கவரும்.” என்றார்.