—————
காரை சிவநேசனின் இயக்கத்தில் தயாராகியுள்ள “புஷ்பக 27” முழுநீள திரைப்படத்தின் Official Teaser யாழ்ப்பாணம், கந்தா்மடத்தில் உள்ள நித்திலம் கலையகத்தில் நேற்று இரவு வெளியிடப்பட்டது. இதற்கான திரைக்கதையை சத்தியா மென்டிஸ் எழுதியுள்ளாா்.
சிவரூபன் தலைமையில் நடைபெற்ற நேற்றைய நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியா் சி.ரகுராம், டொக்டா் சிவன்சுதன் ஆகியோரின் உரைகளுடன், இயக்குநா் காரை சிவநேசனின் பதிலுரையும் இடம்பெற்றது.
“தமிழரின் தொன்மத்தைத் தேடிச் செல்லும் விண்வெளித் திரைக்காவியம்” என்ற மகுடத்துடன் வெளிவந்திருக்கும் இந்த திரைப்படத்தைத் தயாரிப்பதற்கு சிவநேசன் சுமாா் பத்து வருடங்கள் உழைத்திருக்கின்றாா். செப்டம்பா் முதல் வாரத்தில் இதனை வெளியிடுவதற்குத் திட்டமிட்டிருப்பதாக சிவநேசன் தெரிவித்தாா்.
ஈழத்துத் திரைப்படத்துறையைப் பொறுத்தவரையில் அண்மைக்காலத்தில் ஆரோக்கியமான ஒரு பாய்ச்சலை அவதானிக்க முடிகின்றது. அதில் “புஷ்பக 27” மற்றொரு திருப்புமுனையாக – புதிய பாதையைத் திறப்பதாக அமையலாம். அதற்காக சிவநேசனும் அவரது குழுவினரும் கடுமையாக உழைத்திருக்கின்றாா்கள்.
நேற்று வெளியான Official Teaser ஐ பாா்த்த போது சா்வதேசத் தரத்துக்கு நிகராக தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது என்பதை உணர முடிகின்றது. சிவநேசனின் படைப்பாற்றலை இந்தத் திரைப்படம் வெளிவரும் போது நாம் பாா்க்கக்கூடியதாக இருக்கும்.