‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகிய படைப்புகளின் மூலம் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பிய படைப்பாளி மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி, கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக பாரிய வெற்றியை பெற்றிருக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’.
இப்படத்தை வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் பிரத்யேக நிகழ்வு ஒன்றினை ஒருங்கிணைத்திருந்தனர். சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் நடைபெற்ற அந்நிகழ்வில் படக்குழுவினர் பங்குபற்றினர்.
இந்நிகழ்வில் படத்தின் நாயகனான உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ”மாமன்னன் படக்குழுவினருக்கு நன்றி. இப்படத்தை வெற்றி பெற செய்த ஊடகங்களுக்கும், பார்வையாளர்களுக்கும் நன்றி. எம்முடைய முதல் படம் போல் கடைசி படமும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த திரைப்படம் இன்றும் பல பட மாளிகைகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தில் இருக்கும் அழுத்தம் படப்பிடிப்பில் இல்லை. எல்லோரும் மகிழ்ச்சியுடன் தான் பணியாற்றினோம். வடிவேலு அண்ணன் நடித்த காட்சிகளை பார்த்த பிறகு தான் எனக்கு இந்த கதை புரிந்தது. உண்மையிலேயே மாமன்னன் படத்தை அவர்தான் தாங்கியுள்ளார். இசையமைத்த ரகுமான் சாருக்கும் நன்றி. படத்தின் கதையை போல படத்திற்கு இசையும் வலிமை சேர்த்தது அனைவருக்கும் நன்றி. இப்படத்தின் 50 வது நாள் வெற்றி விழாவில் அனைவரையும் மீண்டும் சந்திக்கிறேன் நன்றி” என்றார்.