தமிழ் திரையுலகில் நம்பிக்கையுடன் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர்களான அசோக் செல்வன் மற்றும் சாந்தனு பாக்யராஜ் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘ப்ளூ ஸ்டார்’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘ப்ளூ ஸ்டார்’. இதில் அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், கீர்த்தி பாண்டியன், பிருத்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், லிசி ஆண்டனி, திவ்யா துரைசாமி, அருண் பாலாஜி, பாலாஜி பிரசாத், ராகவ், சஜி, தாமு, ஜெயச்சந்திரன், ஜெயப்பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
தமிழ் ஏ. அழகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். எல். ஜெயரகு கலை இயக்கத்தை மேற்கொள்ள, ஆர். கே. செல்வா படத்தொகுப்பு பணிகளை கையாண்டிருக்கிறார்.
வீதியோர துடுப்பாட்ட விளையாட்டை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் லெமன் லீஃப் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பா. ரஞ்சித், ஆர் கணேஷ் மூர்த்தி மற்றும் ஜி. சௌந்தர்யா ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.
வட தமிழகத்தில் வாழும் ஒடுக்கப்பட்ட இளம் தலைமுறையினரின் விளையாட்டுத் திறமையை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகி இருப்பதாலும், பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் வழங்குவதாலும் திரையுலகினரிடையே குறிப்பிடத்தக்க கவனத்தை கவர்ந்திருக்கிறது.