‘தேன்’ எனும் விருது பெற்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை அபர்னதி, கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘நாற்கரப்போர்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநர்களான சீனு ராமசாமி- பா. ரஞ்சித் -பி. எஸ். மித்ரன் -பத்ரி வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து அவர்களுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் ஸ்ரீ வெற்றி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘நாற்கரப்போர்’ எனும் திரைப்படத்தில் அபர்னதி, லிங்கேஷ், சுரேஷ் மேனன், அருள்மொழி தேவன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அர்ஜுன் ரவி மற்றும் ஆர். எஸ். ஞானசேகர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தினேஷ் அண்டனி இசையமைத்திருக்கிறார். சதுரங்க விளையாட்டு வீரரின் வாழ்வியலை பேசும் இந்த திரைப்படத்தை விஜி பிலிம் பிரைவேட் லிமிடெட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். வேலாயுதம் தயாரித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் அனைத்து பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் விளிம்பு நிலையில் வாழும் பெண்மணியாக அபர்னதி தோன்றுகிறார். அவருடைய பிள்ளை சதுரங்க விளையாட்டு வீரராக வேண்டும் என விரும்புகிறார் என்பதும் தெரிய வருகிறது. அவரால் வெல்ல முடிந்ததா? அல்லது இதற்கு தடையாக எது இருந்தது? என்பதை விவரிக்கும் வகையில் இத்த படைப்பு இருக்கும் என அவதானிக்க இயலுகிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகை அபர்னதியின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.