Tuesday, March 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் சைக்கிள் ஒன்று | சிறுகதை | சாள்ஸ் குணநாயகம்

சைக்கிள் ஒன்று | சிறுகதை | சாள்ஸ் குணநாயகம்

8 minutes read

சாள்ஸ் குணநாயகம் அவர்கள் கலை இலக்கியப் பரப்பில் நன்கு அறியப்பட்ட பன்முக ஆளுமை கொண்டவர். கதைகள், கவிதைகள் என மட்டுப்படுத்தாது நாடக துறையிலும் இன்று வரை கணிசமாக ஈடுபட்டு வருகின்றார். தாயகத்தில் பரந்தனிலும் தற்போது நெதர்லாந்திலும் சமூக செயற்பாடுகளில் முன்னின்று இயங்கி வருகின்றார்.

‘மாமா நானும் வரட்டா, என்னை ஏத்திக்கொண்டு போய் போற வழியில விட்டு விடுறியளா?’ கேட்டுக் கொண்டே பின்னால் ஓடிவந்தான்.

சைக்கிளை மிதித்துக்கொண்டே சட்டென திரும்பிப் பார்த்தேன். மங்கிய வெள்ளை சேட்டும் நீலக் காற்சட்டையும் அணிந்து கொண்டிருந்த அவன், புத்தகப் பையை சுமந்து வெறுங்காலுடன் ஓடி வந்தான். நான் சைக்கிளை நிறுத்திக் கொண்டேன்.

பின்னால் கரியரில் மண்வெட்டியை கட்டி வைத்திருந்தேன். அது ஒரு தைமாத மழைக்காலம். தெருக்கள் எங்கும் குன்றும் குழியுமாய் நீர் தேங்கி நின்றது. கரைகளில் மழைநீர் வாரியடித்து  ஓடிக்கொண்டிருந்தது. காஞ்சிபுர கிராமத்துக்கு தெற்காய் எமக்கு இருந்த வயல் நிலங்களில் நெற் பயிர்கள் குலை தள்ளி செழித்துக் கிடந்தன. நீர் அடித்து சரித்துவிடாமலிருக்க கடவுகளை வெட்டி நீரை வெளியேற்றிவிட்டு அப்போது தான் திரும்பி வந்து கொண்டிருந்தேன்.

‘வா’ சைக்கிளின் முன்னால் பாரில் அவனை ஏற்றிக் கொண்டு மிதித்தேன். அவனுக்கு மிகுந்த சந்தோஷம்.

‘உன்ர பேர் என்ன?’

‘சாந்தன். நான் ஏழாம் வகுப்பு படிக்கிறேன்’.

அவனுக்கு பன்னிரெண்டு வயது. முள்ளி வாய்க்கால் யுத்தகளத்தில் பிறந்த பிள்ளை என்பதும் தந்தை காணாமல் போய் தாயோடும் ஒரு தமைக்கையோடும் வாழ்ந்து கொண்டிருப்பதாக அவனே சொன்னான்.

சுட்டியான பையன். நான் அவனிடம் சிலவற்றைக் கேட்டேன், அவனோ பலவற்றைச் சொல்லி விட்டான். இந்தக் காலத்து பிள்ளைகள் வெளிப்படையாக எல்லாவற்றையும் கதைத்துக் கொள்கிறார்கள்.

‘அம்மாவும் அக்காவும் சில நாட்களில் வயல் வேலைகளுக்கும் வீட்டு வேலைகளுக்கும் போகிறார்கள் மாமா’.

‘உங்களுக்கு வீட்டுத் திட்டத்தில் வீடு கட்ட உதவி கிடைத்துள்ளதா?’

‘ஓம் மாமா மேசன் மாமாவுக்கு உதவியாக நாங்கள் மூன்று போரும் வேலை செய்கிறோம். அதால சில நாட்களில் பள்ளிக்கே போக ஏலாமல் போய்விடும். அம்மா தான் பாவம்’ என்றான்.

ஈழ விடுதலைப் போரில் அழித்தொழிக்கப்பட்ட உயிர்களும் சொத்துக்களும் வாழ்வும் இந்தப் பன்னிரெண்டு வருடங்களில் பார்த்த அவலச்சிறர்களின் அடையாளமாகவே இவனைப் பார்க்கிறேன். இப்படி எத்தனை சிறார்கள். பதும வயதினரான இவர்களின் துயர் சுமந்த வாழ்வும் வறுமையும் கல்வியையும் அதற்கான உரிமையையும் இன்னமும் தடைப்படுத்திக் கொண்டே நகர்கிறது.

‘நீ இப்பிடித்தான் ஒவ்வொரு நாளும் தனியாக நடந்து வருவியா?’

‘இல்லை நாங்கள் ஒரு சிலர் சேர்ந்தே நடந்து வருவம், இண்டைக்கு நான் கொஞ்சம் பிந்தி விட்டேன். அவர்கள் எல்லாரும் முதலே போய் விட்டார்கள்’ பிந்திவிட்ட காரணம் ஒன்றையும் எனக்கு அவன் சொல்லவில்லை.

அவன் சைக்கிளில் ஏறியதிலிருந்தே இடையிடையே சைக்கில் மணியை சுழற்றி சுழற்றி அடித்துக் கொண்டான்.

‘கான்டிலில்’ என் கைகளுக்கருகே தன் இரு கைகளையும் பிடித்துக்கொண்டு கான்டிலை திருப்பி திருப்பி அசைத்துக் கொண்டே தானும் அந்த சைக்கிளை ஓட்டுவதாக பாவனை பண்ணிக் கொண்டான்.

‘மாமா புது சைக்கிள் ஒண்டு இப்ப என்ன விலை வரும்’.

‘ஒரு ஏழாயிரம் எட்டாயிரம் வரும்’.

‘ஓ… அவ்வளவு காசா, உங்கிட இந்தச் சைக்கிள்’.

‘இது பழசு, ஐஞ்சு வருஷமா எங்களிட்ட இருக்கு, என்ர ஐயாவின்ர இது. ஒரு ஐயாயிரம் வரும்’.

‘சைக்கிள் ஒண்டிருந்தா கெதியா பள்ளிக்கு வந்திடலாம் மாமா’.

பள்ளியிலும் படிப்பிலும் அவனுக்கு ஆர்வம் இருப்பதாக எண்ணினேன்.

‘ஓம் ஓம் அது சரி, வகுப்பில் நீ எத்தினையாம் பிள்ளையாய் வருவாய்’

‘போன வருஷம் பதினைந்தாம் பிள்ளை, வகுப்பில் முப்பத்திரெண்டுபேர் மாமா’. என பெருமையோடு சொல்லிக்கொண்டான். காஞ்சிபுரத்துக் கிராமம் பரந்தன் என்னும் சந்தி ஊரின் ஒரு சிறுபகுதி. பரந்தனை சுற்றி உள்ள வயல் நிலங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்ட கூலித் தொழிலாளர்களின் குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்ட தரிசு நிலம்.

பரந்தன் சந்தியில் இருந்து மேற்காய் குமரபுரத்துக்கூடாக நீழும் வீதியும், பூனகரி வீதியில் ஐந்தாம் வாய்க்கால் சந்தியிலிருந்து பத்து ஏக்கர் வயல் குடியிருப்புகளுக்கூடாக நீழும் வீதியும் இணையும் இக்கிராமம், பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது.

இந்த இரண்டு பாதைகளிலும் நீண்ட பச்சை வயல் வெளியும் அருகருகாய் வரும் தெருவும் நீர் வாய்க்காலும் இரு புறமும் அமைந்த ஓட்டு வீடுகளும் வீடு களைச்சுற்றி ஓங்கி வளர்ந்த தென்னந் தோப்புகளும் பழமரக் காடுகளுமாக அந்நிலம் ஒரு எண்பது ஆண்டு கால வாழ்விடமாக செழித்துக்கிடந்தது. மூன்று தலைமுறையாய் வாழ்ந்த சனங்களின் அடையாளப் பூமி இது.

குமரபுர வீதியில் ஐந்தாவது ஒழுங்கையில் நான் திரும்ப வேண்டும். அதற்கு அப்பால் இரண்டு ஒழுங்கைகள் கடந்து அவனைப் பாடசாலை வாசலில் இறக்கிவிட்டேன். ‘நன்றி மாமா’ என்றவன். பச்சை முகப்போடு நிமிர்ந்து நின்ற பாடசாலை வாசலைக் கடந்து உள்ளே போனான்.

பாடசாலை ‘அசெம்பிளி’ தொடங்கி விட்டது. அதிபர் பேசிக் கொண்டிருந்தார். மாணவ மாணவிகள் வரிசையில் நின்றனர். பின்னால் நின்ற டிசிப்பிளின் ஆசிரியர் அவனது வருகையை முறைத்துப் பார்த்து கொண்டு நின்றார். என்னையும் திரும்பிப் பார்த்தார்.

யுத்தத்தால் அழிக்கப்பட்ட பரந்தனும் அதை சுற்றிய கிராமங்களும் அதன் மக்களும் முள்ளிவாய்க்கால் வரை நெடுந்தூரம் போன சனத்திரளில் காஞ்சிபுரமும் அடங்கி நடந்தது.

போராளிகளாகவும் அப்பாவிகளாகவும் போன அத்தனை குடும்பங்களிலும் இழப்புகள் இல்லாதவர்கள் என்று எவரும் இல்லை. அதுவும் கணவனை இழந்து, பிள்ளைகளைக் காப்பாற்றும் பெண்களின் துயரம் சொல்லிமாளாது.

போர் நடந்து முடிந்த பின்னர் கடந்த ஐந்து ஆறு ஆண்டுகளாக புலம் பெயர்ந்து வாழும் ஈழ அமைப்புகள் மற்றும் தனி நபர்களின் உதவிகள் மெல்ல மெல்ல கிளிநொச்சி மற்றும் வன்னிப்பிரதேசங்களிற்கு கிடைத்து வருகின்றன தான். ஆயினும், உள்ளே நீழும் குக்கிராமங்களுக்கு சென்று சேர்வதற்கான உரிய பாதைகளே இல்லாமல் அடைபட்டுத் தான் கிடக்கிறது.

சாந்தன் பாடசாலை முடிந்து வீடு செல்லும் வேளைகளில் தற்செயலாக என்னைக் கண்டால் கையசைப்பான். சிலவேளை மாமா என்றும் கூப்பிடுவான்.

இவனுக்குள்ளே இருக்கும் ஏதோ ஒன்று அவன் மீது அக்கறையாய் என்னுள்ளும் விரிகிறது. ஜாலியாய் துள்ளித்திரிந்து விளையாட வேண்டிய இந்த வயதுச் சிறுவர்களின் வாழ்வையும் கூட போர் என்னும் பெரும் புயல் வட்டறுந்து விழுந்து விட்ட மரங்களாக மாற்றியிருக்கிறது.

அன்று ஒரு வெள்ளிக்கிழமை. இளைஞர் வட்ட விளையாட்டு திடலுக்கு நேரெதிரில் இருந்த அவர்களின் சனசமூக நிலையத்தில் அன்றைய தினசரிகளை வாசித்து விட்டு வெளியே வீதிக்கு வந்தேன்.

அப்பொழுது பாடசாலை முடிந்து பிள்ளைகள் தெருவெங்கும் வந்து கொண்டிருந்தனர். சிலர் சைக்கில்களிலும் ஆட்டோக்களிலும் மோட்டார் வண்டிகளிலும் ஏறி வீடுகளை நோக்கி விரைந்து கொண்டிருந்தனர்.

சாந்தனின் நினைவு வந்ததால் சைக்கிளை எடுத்து மிதித்துக் கொண்டு ஐந்தாம் ஒழுங்கை வரை வந்து விட்டேன். சைக்கிளை நிறுத்தி நடந்து போகும் சிறுவர் கூட்டத்துள் அவனைத் தேடினேன்.

திரும்பிப் பார்த்து அவனே மாமா என்றவாறு கிட்ட வந்தான். ‘நான் வயலுக்கு போறன் வரப்போறியா?’

‘ஓம் ஒம்’ என கிட்ட வந்தான்.

சைக்கிளிலில் இருந்தபடி ஒற்றைக் காலை ஊன்றிக்கொண்டு நின்றேன்.

பின் கரியரில் ஏறப்போனவன் திடீரென திரும்பி என் கைகளுக்குள் புகுந்து முன் பாரில் ஏறிக்கொண்டான்.

நான் சைக்கிளை வேகமாக மிதித்துக் கொண்டு வந்தேன்.

‘உனக்கு சைக்கிள் ஓட்ட தெரியுமா’

‘பாருக்கு கீழால் ஓட்டிப் பழகி இருக்கிறேன்’

‘அக்கா தான் பழக்கி விட்டவா’

‘அக்கா சைக்கிள் ஓட்டுவாவா’

‘ம் அம்மாவும் ஓட்டுவா’

‘வீட்டில சைக்கிள் நிற்கிதா’

‘பழைய சைக்கிள் ஒன்று நின்றது இப்ப இல்லை’

பாலம் கடந்ததன் பின்னர் சைக்கிளை நிறுத்திக்கொண்டேன்.

‘இந்த சைக்கிளை ஓடிப்பார்க்கப் போறியா’

‘மாமா உண்மையாகவா’ திரும்பி என் முகத்தைப் பார்த்தான். அவனுக்குள்ளே ஆனந்தம் பொங்கிப் பிரகாசித்தது. நான் சைக்கிளை விட்டிறங்கி அவனிடம் கொடுத்தேன். அவன் ‘பார்’க்கு கீழே ஒற்றைக்காலை விட்டு தெருவெங்கும் விண் பூட்டிய பட்டம் போல் திரும்பி திரும்பி ‘எட்டடித்து’ ஓடித்திரிந்தான். நான் அருகே நின்ற நாவல் மரமொன்றில் சாய்ந்து கொண்டு அவனைக் கவனித்துக் கொண்டேன்.

நாவலில் இருந்த சிட்டுக் குருவிகள் வேலிக்கும் மரத்துக்குமாக மாறி மாறிப் பறந்து கொண்டிருந்தன. அவன் எனக்கு கிட்டவாய் வந்தபோது ‘பார்க்கு மேலே ஓடிப்பார்க்கிறியா? உன்ர உயரத்துக்கு அது ஏலும்’ என்றேன்.

சைக்கிளை நிறுத்தி அவன் ஏறுவதற்காக பிடித்தும் விட்டேன். சிலநேரம் அவன் விழுந்து விடுவான் என்ற அச்சத்தில் அவனைப் பின் தொடர்ந்து ஓடினேன். அவனது வேகத்துக்கு என்னால் ஓடமுடியவில்லை.

அவன் திரும்பி என்னை வாஞ்சையோடு பார்த்துக் கொண்டான். பல தடவை போய்ப் போய் திரும்பி வந்தான். அவனது தேகம் வியர்த்து, மேற்சட்டை நனைந்து உடலோடு ஒட்டிக்கொண்டு கிடந்தது. அவன் உற்சாகம் குறையாமல் ஓடிக்கொண்டே இருந்தான். விர் விர் என்று பறக்கும் அந்தச் சிட்டுக்குருவிகளைப் பார்த்துக் கொண்டேன்.

நடந்து வந்த பள்ளித் தோழர்கள் எல்லோரும் காஞ்சிபுர சந்திக்கு வந்து விட்டார்கள். களைக்கக்களைக்க சைக்கிளை நிறுத்தி அவன் இறங்கிக் கொண்டான். ‘இருக்கையில் இருந்து ஓட்டும் வரை உனக்கு பழக்கிவிடுகிறேன், நீ நல்லாத்தான் ஓட்டுகிறாய்’.

‘நன்றி மாமா’ என்றபடி சைக்கிளை என்னிடம் தந்துவிட்டு கையசைத்தபடி நண்பர்களுடன் சேர்ந்து வீட்டுக்குப் போனான். சைக்கிளை மிதித்துக் கொண்டு முருகன் கோவிலுக்கு வந்தேன். அவனுக்கு ஒரு சைக்கிள் தேவைதான்.

என்னிடம் ஒரு பத்தாயிரம் ரூபா இருந்தது. கார்திகையில் ஏற்பட்ட வெள்ள நிவாரணத்துக்கு அதையும் கொடுத்து விட்டேன் என்ன செய்வது?

புலம் பெயர்ந்து வாழும் எனது ஆசிரியர் ஒருவர் ஈழ மாணவர்களுக்கான உதவிப் பணிகளை செய்துகொண்டிருப்பது தெரியும். அவரோடு பேசி, அவரூடாக கிளி மக்கள் அமைப்பின் ஆயிரம் சைக்கிள் திட்டம் செயற்பாட்டாளர் சுரேனுக்கு விபரங்களை அனுப்பி வைத்தேன்.

இப்பொழுது அவன் கொஞ்சம் உயர்ந்து வளர்ந்து விட்டான். ஒரு புதிய சைக்கிளில் தினமும் பாடசாலைக்கும் மாலை நேர வகுப்புகளுக்கும் வந்து போகிறான். சந்திக் கடைகளிலும் சந்தையிலும் பொருட்களை வேண்டிப் போகிறான். என்னைக் காண்கின்ற போதெல்லாம் சைக்கிளை விட்டு இறங்கி நின்று கதைப்பான்.

சைக்கிளை நன்றாக துடைத்து பளபளப்பாக வைத்திருந்தான்.

– சாள்ஸ் குணநாயகம்

நன்றி – தாய்வீடு – கனடா – ஜூலை 2020

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More