அம்மா இருந்தவரை மடல்கள் வரும்,
அன்பைச் சுமந்தபடி..
பிறகு,
பாசத்தை தெரிவித்தபடி ஒருகடிதம்..
அதுவும் போய்
யுத்தம் தின்ற பூமியிலிருந்தென
உறவுசொல்லி மடல்கள் வரும்..
இப்போது,
நண்பர்களைப் பற்றிக் கேட்டிருப்பேன்.
கோயிலைப்பற்றி விசாரித்திருப்பேன்.
அந்நாட்களில்
நான் சுற்றிவந்த அல்லது என்னைச் சுற்றிவந்த
பெண்களைப் பற்றிய செய்தியும்
அவர்களுக்கு எரிச்சலைத் தந்திருக்கவேண்டும்.
பெரும்பாலும்,
என் மீதான எரிச்சலா அல்லது
மடல்களில் உறங்கும் எனது கேள்விகள் மீதா??
நண்பன்
தன் அனுபவத்தைச் சொல்லிச் சென்றான்.
புரிகிறது மெதுவாய்…
நான் அனுப்பும்
மடல்களுடன் வரைவோலை இல்லை என்பதே..
முல்லைஅமுதன்
10/02/2021