Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் வெற்றிமாறன் தயாரிப்பில் பிரமிள் பற்றிய ஆவணப்படம் – ஆர்.சி.ஜெயந்தன்

வெற்றிமாறன் தயாரிப்பில் பிரமிள் பற்றிய ஆவணப்படம் – ஆர்.சி.ஜெயந்தன்

2 minutes read

தமிழ் இலக்கியத்தில் நவீனக் கவிதை என்பது பாரதியின் வசனக் கவிதையிலிருந்து தொடங்குகிறது. அதன்பின்னர், அதனை ‘எழுத்து’ இலக்கிய இயக்கம் முன்னெடுத்து வளர்த்தது. ‘எழுத்து’ இலக்கியச் சிற்றிதழில் முதன் முதலில், ‘படிமக் கவிதை’ எழுதி நவீனத் தமிழ்க் கவிதையை செழுமைபடுத்தியவர் கவிஞரும் எழுத்தாளருமான பிரமிள். கவிதையைப் பெரும் பரிசோதனைக் களமாக மாற்றிக்காட்டிய பிரமிள், ஒரு ஓவியரும் சிற்பியும் ஆவார். தீவிர இலக்கிய வாசகர்களுக்காக பிரமிள் எழுதிச் சென்றிருந்தாலும் அவருடைய பல கவிதைகள் வெகுஜன வாசகர்களையும் கவர்ந்தவை. உதாரணத்துக்கு..
சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது

  • என்கிற அவருடைய கவிதை, காட்சிமொழியின் வழியாக, மிகக் குறைந்த வார்த்தைகளில் ஒரு காவியம்போல் விரிந்து, வாசகரின் சிந்தனையில் பெரும் ஜாலங்களை நிகழ்தும் ஒன்று. பிரமிளின் மொத்த எழுத்துகளையும் அவருடைய நண்பர்களில் ஒருவரும் இலக்கியவாதியுமான கால சுப்ரமணியம் ஆறு பெரிய தொகுப்புகளாகப் பதிப்பித்திருக்கிறார். மொழியையும் காட்சியையும் இணைப்பதில் தலைசிறந்து விளங்கிய பிரமிள், இலங்கையின் திரிகோணமலையில் பிறந்து வளர்ந்தவர். இலங்கை இனப் பிரச்சினை தீவிரவடையும் முன்பே அறுபதுகளில் சென்னையில் குடியேறி வாழ்ந்தவர்.

தன்னுடைய கடைசி நாட்களில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு, வேலூர் அருகிலுள்ள கரடிகுடி சமுதாய மருத்துவமனையில் சிகிச்சைபெற்று அங்கேயே காலத்தின் தீராத பக்கங்களில் கலந்தார். அவருடைய சமாதி அங்கேதான் இருக்கிறது.

பாலுமகேந்திராவின் உதவியாளர்களில் ஒருவருமும் வெற்றிமாறனுடன் இணைந்து பணிபுரிந்தவருமான தங்கம், கவிஞர் பிரமிளின் தீவிர வாசகரும் அவரைச் சந்தித்தவரும் ஆவார். இவர் தற்போது அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப்பெரியவன்’ படத்தின் கதை, திரைக்கதையை வெற்றிமாறனுடன் இணைந்து எழுதியிருப்பவர். பிரமிள் மீதும் அவரது படைப்புலகம் மீதும் கொண்ட பற்று காரணமாக ‘காற்றின் தீராத பக்கங்களில்’ என்ற தலைப்பில் பிரமிள் பற்றி 2 மணி நேர ஆவணப்படத்தை கால சுப்ரமணியம் வழிகாட்டுதலுடன் இயக்குகிறார்.

மேலும் இந்த ஆவணப்படத்தின் படப்பிடிப்பை பிரமிளின் சமாதி அமைந்துள்ள கரடிக்குடியிலிருந்து தொடங்கியிருக்கிறார்கள். இந்த ஆவணப்படத்தை தன்னுடைய கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி சார்பில் வெற்றிமாறன் தயாரிக்கிறார். அதுமட்டுமல்ல; பிரமிளின் சமாதி இருந்த இடத்திலேயே அவருக்கு மணி மண்டபம் அமைக்கும் பணியையும் வெற்றிமாறன் ஏற்றுள்ளார். இந்த மணிமண்டபத்தில் நிறுவப்பட இருக்கும் சிலையை வடிவமைத்து உருவாக்க இருப்பர் சிற்பி சந்துரு. இவரும் பிரமிளின் படைப்புகளுக்கு தீவிர அபிமானி.

வெற்றிமாறன் பிரமிளின் இந்த ஆவணப்படத்தை தன்னுடைய ஆஸ்தான ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான வேல் ராஜை ஒளிப்பதிவு செய்யவும் அமர்த்தியிருக்கிறார். ‘இந்த ஆவணப்படம் மே 1-ல் வெளியாகலாம்.’ என்கிறார் கால சுப்ரமணியம்.

இந்து தமிழ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More