’திருக்குறள் –ஒரு மறுவாசிப்பு ’எனும் ஆய்வு நூலின் வழி பெரிதும் அறியப்பட்ட கனடா வாழ் தமிழறிஞர் தீனதயாளன் ( சொல்லாக்கியன்) தமது , ‘தமிழ் சித்திர அகராதி’ எனும் நூலை அறிமுகம் செய்யும் நோக்கில் இந்த வாரம் இலங்கை வந்திருந்தார். பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் , கிழக்குப் பல்கலைக்கழக, “சிந்து சமவெளி நாகரிக சின்னங்களும் / படங்களும் தமிழ் வரிவடிவம் பெற்றமை” எனும் தலைப்பிலான ஆய்வுரை வழங்கினார்.
9.10.2023 அன்று, பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் ஸ்ரீ.பிரசாந்தன் தலைமையில், சொல்லாக்கியன் நிகழ்த்திய உரையின் போது சிந்து சமவெளி சின்னங்களில் முக்கிய ஒன்றான யோக நிலையில் தியானிக்கும் உருவமே, “க” எனவும், அதன் இயக்க வடிவமாக “ச” வும், அதன் நின்ற கோலமாக “த” வும் தோன்றின என்பது புதுமை. அதைப் போன்றே, “ப”, “ம”, “ழ” ஆகியவையும், பாத்திரம் அல்லது சாடியில் இருந்து வடிவம் பெற்றமையை விளக்கினார்.
ஒவ்வொரு தமிழ் எழுத்துக்கும், பொருண்மை உண்டு என உரைத்த சொல்லாக்கியான் அது தொடர்பான தன் கடந்தகால ஆய்வு எடுத்துக்காட்டுகளை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.
திருக்குறள் மறுவாசிப்பு- சொல்லாய்வின் அடிப்படையில் ,”ஆதி”, “பகவன்” எனும் சொற்கள் தமிழ்தான் என நிலைநாட்டிய சொல்லாக்கியன் ,அகரமே, எல்லா தமிழ் எழுத்துகளின் உருவாக்கத்திலும் பங்கு பெற்று இருக்கின்றது ; இறைமையே பிரபஞ்ச முழுமையினதும் உயிருமாய் இருக்கின்றது . ’எல்லாம் சிவமே’ எனும் தத்துவம் மெய்யியல் குறியீடாக உருவாகி உள்ளது எனக் கருத இடமளிக்கிறது. இது, முதல் குறளுக்கு புதிய விளக்கத்தையும் அளிக்கிறது என்ற அவரது ஆய்வுக்கருத்தாக்கமானது ஆய்வரங்கில் கலந்து கொண்ட பேராசிரியர்கள் ,மாணவரின் ஆர்வமான கலந்துரையாடலுக்கான களமானமை குறிப்பிடத்தக்கது.
11.10.2023 அன்று, மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி வ. குணபாலசிங்கம் அவர்கள் தலைமையில், சொல்லாக்கியன் நிகழ்த்திய உரையின் போதும், அரங்கம் நிறைய மாணவர்கள் பங்கு பெற்றனர். பல்துறைப் பேராசிரியர்களும் வருகை தந்திருந்தனர்.
தமிழ் எழுத்துகள் எப்படி கணிதத் துல்லியத்துடன் ஒன்றோடு ஒன்று இணைந்து வடிவம் பெறுகின்றன எனப் புலப்படுத்திய சொல்லாக்கியன், கீழடியின் வரிவடிவ சான்றுகள்படி, தமிழ்தான் சிந்து சமவெளியின் குறிகளுக்கும் சின்னங்களுக்கும் நேரடி மற்றும் தொடர்ச்சியான முதல் உரிமை பெறுகின்றது என முடிவு கொள்ள வேண்டி உள்ளது என முன் வைத்த கருத்தானது ஆய்வரங்க கலந்துரையாடலில் முக்கிய கவனம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.