இலங்கை, கிளிநொச்சியில் பிறந்தவர். இலங்கை அரசின் சாகித்ய விருதுகளை வென்றவர். ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். ஐம்பது வருடங்களுக்கு மேல் எழுதிக் கொண்டிருக்கிறார். இதுவரை 7 நாவல்கள், 3 குறுநாவல்கள், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள் நூலாக்கம் பெற்றுள்ளன. இது இவரது சமீபத்திய சிறுகதைத் தொகுப்பு.
அநேகமாகத் தொகுப்பின் கதைகள், போருக்கும், போர்முடிந்த சிதிலத்திற்குமிடையிலான கதைகள். இவரது கதைகளில் நான் கவனித்த விஷயம், முழுதும் கெட்டவர்கள் என்று யாருமேயில்லை. அன்பு, கருணையால் நிரம்பியவர்கள். தன்னை விட்டுச் சென்ற மனைவியிடமும் கூட நல்லதை நினைத்துப் பார்க்கும் கணவன் போல் கதாபாத்திரங்கள். சிறுவயதில் பாட்டி சொன்ன கதையில் தருமன் ஊரைச்சுற்றிவிட்டு எல்லோரும் நல்லவர்கள் என்பான். நான் தான் துரியோதனன் போலிருக்கிறது.
பெண்களின் அகஉணர்வுகள் கதைகளில் நன்றாக வந்திருக்கின்றன.
கணவன் போரில் மடிந்துவிட்டான் என்ற நம்பிக்கையில் வேறு வழியின்றி இன்னொருவனைத் திருமணம் செய்தவள் வாழ்வில் பழைய கணவன் மறுபடி வருகையில் அவளது உணர்வுகள் கச்சிதமாக வெளிப்படுவது போல் பல கதைகளில் வெளியாகின்றன. கணவனுடன் கோபித்துக் கொண்டு ஒரு மாதம் தாய் வீடு சென்ற பெண்ணின் கோணத்தில் அந்தக் கதை நன்றாக வந்திருக்கிறது.
Arranged marriagesல் கூட இப்போது பெரும்பாலும் இருவரும் பேசாது சம்மதம் சொல்வதில்லை. இதை ஒரு லைசன்ஸாக எடுத்துக் கொண்டு பொழுதுபோகப் பேசி, இறுதியில் வேண்டாம் என்று சொல்லும் ஆண்கள் இருக்கிறார்கள். அது போன்ற சமகாலச் சங்கடங்கள் இவரது Story line ஆக வந்திருக்கின்றன. ஆனால் அந்தக் கதையில் ஆழம் இல்லாது Flatஆக முடிந்தது போல் பல கதைகளில் நேர்ந்திருக்கிறது.
பதினைந்து கதைகள் கொண்ட தொகுப்பு. மொழிநடை சரளமாக வந்திருக்கிறது. எத்தனையோ மனிதர்களின் வாழ்வைப் போர் தடம்புரள வைத்தது. அதை ஆவணமாக்கும் முயற்சிகளே இவரது கதைகள். யாரோடு நோவோம், மௌனயுத்தம் போன்ற வெகுசில கதைகள் தொகுப்பில் எனக்குப் பிடித்தவை.
சரவணன் மாணிக்கவாசகம்
பிரதிக்கு:
எதிர் வெளியீடு 99425 11302
முதல்பதிப்பு டிசம்பர் 2023
விலை ரூ. 250.