ஈழத்து கவிஞர் தீபச்செல்வனின் புதிய கவிதை தொகுப்பின் அட்டைப் படம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 24ஆம் திகதி தீபச்செல்வனின் பிறந்த தினமன்று, ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ என்ற புதிய கவிதை நூலின் அட்டைப் படத்தை யாவரும் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு தீபச்செல்வன் எழுதிய நடுகல் நாவல் வெளியாகி உலக அளவில் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. நடுகல் மூவாயிரம் பிரதிகளை தாண்டி, மூன்றாவது பதிப்பு காண்பதாக அண்மையில் தீபச்செல்வன் தெரிவித்திருந்தார்.
கவிதைகள் வாயிலாக பரவலாக பெரும் வரவேற்பை பெற்றுள்ள தீபச்செல்வனின் ஆறாவது கவிதை நூல் இது. இதற்கு முன்னதாக எனது குழந்தை பயங்கரவாதி என்ற கவிதை நூலினை விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ள நிலையில் தீபச்செல்வனின் புதிய கவிதை நூலை தமிழகத்தில் உள்ள யாவரும் பதிப்பகம் வெளியிடுகின்றது.
உலகத் தமிழ் வாசகர்களை மாத்திரமின்றி, அனைத்துலகத்தை சேர்ந்தவர்கள் மத்தியிலும் வரவேற்பு பெற்றுள்ள நான் ஸ்ரீலங்கன் இல்லை என்ற கவிதையினை தலைப்பாக கொண்டுள்ள புத்தகத்தின் அட்டைப் படம் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.