ஈழத்தின் முதன்மையான திரைப்பட இயக்குனர் நா. கேசவராஜன் மாரடைப்பால் இன்று காலமானார்.
ஈழத் திரையுலகத்தை பெரும் சோகத்தில் தள்ளியுள்ளது இவரது இழப்பு. இவர் குறித்து ஈழத்தின் இயக்குனர் ஞானம் காசிநாதர் எழுதிய குறிப்பினை இங்கே தருகிறோம்.
1980களில் வீஎச்எஸ் வீடியோ கேமராவினால் தனது முதல் முழுநீளத் திரைப்படத்தை தானே கதை எழுதி, இயக்கி, தயரரித்து தானே யாழ்ப்பாண மக்களுக்கு போட்டும் காண்பித்தார். (“தாயகமே தாகம்” 1986)
ஏற்கனவே எமக்கான சினிமா என்ற ஒரு எண்ணக்கருவுடன் இருந்த தலைவர் பிரபாகரன் அவர்களின் காதுகளுக்கு இந்த விடயம் எட்டியது. அதைத் தொடர்ந்து 1987 இல் இருந்து நா.கேசவராஜன் அவர்கள் புலிகளின் திரைப்படத்துறையின் ஒரு ஆஸ்தான திரைப்பட இயக்குநராக ஆக்கப்பட்டார்.
அவரைப் போன்று அக்காலத்தில் ஞானரதன், பொ. தாஸ் போன்றவர்களும் இணைந்து புலிகளின் நிதர்சனம் திரைப்படப்பிரிவை வளாத்தெடுப்பதிலும், பல தொழில்நுட்பக் கலைஞர்களை பயிற்றுவிப்பதிலும், தம்மிடம் உள்ள வசதிகளைக் கொண்டு படைப்பகளைத் தயாரிப்பதிலும் தம்மை முழுமையாக ஈடுபத்தினர். போர் முனைகளின் கதைகளை, போர் முனையில் நின்று படமாக்கினர். ஆவணமாக்கினர். பாடலாக்கினர்.
அன்று முதல் இன்றுவரை திரு நா.கேசவராஜன் அவர்கள் திரைப்படத்துறையைத் தவிர வேறெந்தத் துறையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது கிடையாது. வேறு தொழிலுக்குச் சென்றதும் கிடையாது. இதனால் அவருடைய குடும்பம் பொருளாதார ரீதியில் பட்ட துன்பங்கள் பல. அது பற்றி அவரின் அனுமதி இன்றி இங்கு நான் விபரமாக எழுதுவது சரியல்ல.
ஆனால் அவருடைய கஸ்டங்களை நேரில் கண்டவர்கள் பலர் உள்ளனர். ஆனால், எந்த நிலையிலும் அவர் புலிகளையும் விடவில்லை. சினிமாவையும் விடவில்லை. அவரின் வழிநடத்தலில் புலிகளின் திரைப்பட மற்றும் தொலைக்காட்சித் துறை சார்ந்து உருவாக்கப்பட்ட கலைஞர்கள் படைப்பாளிகள் பலர்.
இக்காலப் பகுதியில், “கடலோரக் காற்று”, “அம்மா நலமா” உட்பட 6 முழுநீளத் திரைப்படங்கள், 5 குறுந்திரைப்படங்கள், 10க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை இயக்கி உள்ளார்.
2002 இல் ஸ்க்றிப்நெட் இனால் யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்ட பயிற்சிப் பட்டறையில் தொடர்ந்து மூன்று கட்டங்களுக்கும் தகுதி பெற்று மூன்று கட்ட பயிற்சிகளையும் நிறைவுசெய்தார். தன்னுடைய நீண்டகால அனுபவங்களுடன் திரைப்படத்துறையில் முன் அனுபவம் இல்லாத பலருடன் தானும் ஒரு மாணவனாக இருந்து இங்கிலாந்தில் இருந்து வருகை தந்த திரைப்பட பயிற்றுவிப்பாளர்கள், இயக்குனர்களிடம் இருந்து பல விடயங்களை கறந்து எடுத்தார்.
2009 க்குப் பின்னரும் கூட அவர் திரைப்படச் செயற்பாட்டை தொடர்ந்து செய்து வருகின்றார். அவர் பல திரைப்படத்துறைக் கலைஞர்களை தொடர்ந்து உருவாக்கி வருகின்றார்.
இவருக்கும் எனக்குமான நல்லுறவு கூடிய பட்சம் 5 நாடகளுக்கே தொடர்ந்து நீடிக்கும். அதற்குள் ஏதாவது சண்டை வந்துவிடும். பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் தொடரும். இப்ப கூட இவருக்கும் எனக்கும் பெரிய நல்லுறவு கிடையாது. உணர்ச்சிவசப்படுதல், வெளிப்படையாகப் பேசிப் பகைத்துக் கொள்ளல், பிடிவாதம் போன்ற கலைஞர்களுக்கே உரிய பலவீனங்களுக்கு இவர் சொந்தக்காரராக இருப்பதே அதற்கு முக்கிய காரணம். மற்றும்படி அருமையன இதயம் உள்ளவர்.
இயக்குநர் கேசவராஜனின் எழுத்து இயக்கத்தில் வெளிவந்துள்ள “பனைமரக்காடு” படம் ஈழம் சினிமா பற்றிய நம்பிக்கையை மீண்டும் தந்துள்ளதாக அதனைப் பார்த்த பலர் தம் கருத்துக்களை பதிவு செய்து வருவதை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது.