இந்த வருடம் அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ள அமைப்புகளில் ஒன்று மெமோரியல்
மேமோரியலை புட்டின் ஆட்சியின் கீழ் தடைசெய்யப்பட்ட ரஸ்யாவின் மனச்சாட்சி என வர்ணித்துள்ள ஏஎவ்பி விமர்சனங்களை எழுப்பும் குரல்களிற்கு எதிரான ஒடுக்குமுறையின் போது மெமேரியல் மூடப்படவேண்டிய நிலையேற்பட்டது எனவும் தெரிவித்துள்ளது
மெமோரியல் குறித்து ஏஎவ்பி மேலும் தெரிவிப்பதாவது
1990களில் ஜனநாயகத்தை நோக்கிய ரஸ்யாவின் குழப்பகரமான மாற்றத்தின்போது நம்பிக்கையின் சின்னமாக உருவெடுத்த இந்த அமைப்பு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நிர்வாகத்தின் கீழ் இறுக்கமான ஏதேச்சதிகார போக்கிற்கான உதாரணமாக கடந்த வருடம் மூடப்பட்டது.
கம்யுனிச ஒடுக்குமுறையினால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவுகளை காப்பாற்றுவதற்கான போராட்த்தின் மூலமும் செச்னியாவிலும் ஏனைய பகுதிகளிலும் ரஸ்யாவின் ஈவிரக்கமற்ற யுத்தத்துடன் தொடர்புடைய மனித உரிமை மீறல்கள் குறித்தும் பிரச்சாரம் செய்தமையினால் மெமோரியல் சிவில் சமூகத்தில் முக்கிய தூணாக மாறியது.
இந்த குழுவினர் சோவியத் கால குற்றங்கள் குறித்த மிகப்பெருமளவு தகவல்களை தம்வசம் வைத்துள்ளனர்.
மேலும் ஜோசப்ஸ்டாலின் காலத்தின் பயங்கரங்கள் குறித்த உத்தியோகபூர்வ சொல்லாடல்களை கேள்விக்குட்படுத்தியுள்ளனர்.
சிரியாவில் உள்ள ரஸ்ய கூலிப்படையினருக்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்துள்ளதன் மூலம் தற்கால மனித உரிமை மீறல்கள் குறித்தும் இவர்கள் தங்கள் அக்கறையை வெளிப்படுத்தியுள்ளனர்.
மெமோரியல் அமைப்பை மூடுவதற்கான சட்ட நடவடிக்கைகளில் ரஸ்ய ஜனாதிபதி தலையிடவேண்டும் என கடந்த வருடம் டிசம்பர் மாதம் ரஸ்ய ஜனாதிபதியிடம் மனித உரிமை அமைப்புகள் வேண்டுகோள் விடுத்திருந்தன.
எனினும் மெமோரியல் பயங்கரவாத தீவிரவாத அமைப்புகளிற்காக பரப்புரை செய்கின்றது என புட்டின் தனது மனித உரிமை பேரவைக்கு தெரிவித்தார்,இதன் மூலம் அந்த அமைப்பினை முடக்குவதற்கான தனது விருப்பத்தை தெளிவாக வெளிப்படுத்தினார்