கிளிநொச்சி வடக்கு வலயக்கல்வி அலுவலகத்தில் தமிழ்ப்பாட ஆசிரிய ஆலோசகராகப் பணி புரியும் திரு கிருஸ்ணமூர்த்தி அவர்களின் சேவையினை கௌரவித்து “கிருஸ்ணமூர்த்தம்” எனும் மணிவிழா மலர் வெளியிடப்பட்டது.
வெளியீட்டு நிகழ்வினை கிளிநொச்சி கல்விவலய தமிழாசிரியர்கள் வட்டம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வுகளை ஆசிரியர் ஜெயராஜ் இராமநாதபிள்ளை தொகுத்து வழங்கினார்.
கிளிநொச்சி இந்துக்கல்லூரி அதிபர் திருமதி மீனலோஜினி இதயசிவதாஸ் அவர்கள் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.
பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உயர்திரு சிவபாலன் குணபாலன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
அழகியதொரு வரவேற்பு நடனத்தினை கிளி/ இந்துக்கல்லூரி மாணவிகள் நிகழ்த்தினர். நல்லதொரு எதிர்காலம் நடனத்துறையில் இருப்பதைக் காணக்கிடைத்தது.
வரவேற்பு உரையினை திருமதி கலைச்செல்வி ஞானசேகர் நிகழ்த்தினார்.
வாழ்த்துக்கவிதை முல்லைத்தீபன் வழங்க, மாணவர் உரையினை செல்வன் பா.சஜந்தன் சுருக்கமாக நிகழ்த்தினார்.
அருமையானதொரு பாடலை தமிழாசிரியர் கனகபாரதி செந்தூரன் பாடினார்.
வாழ்த்துரையினை கிளி/ இந்துக்கல்லூரி முன்னாள் அதிபர் திரு கார்த்திகேசு இராமஜெயம் அவர்கள் வழங்கினார்.
கிருஸ்ணமூர்த்தம் நூலின் நயவுரையினை செம்மொழிக்குரலோன் சின்னப்பா நாகேந்திரராசா வழங்க, நன்றியுரையினை தமிழாசிரியை திருமதி தி.ஜீவரஞ்சினி நிகழ்த்தினார்.
நீரோடும் கால்வாயோரம் மங்கள வாத்தியம் முழங்க, அமைதியான சூழலில் கம்பீரமாக அமைந்திருந்த கிளி/ இந்துக்கல்லூரி பிரதான மண்டபம் வரவேற்றிருந்தது.
பாடசாலைச் சூழல் அழகாக இருந்ததுடன், மிடுக்கான தோற்றத்துடன் அழகாக வரவேற்ற அதிபரோடு ஆசிரியரும், அவர்தம் மாணவரும் பங்கெடுத்திருந்தமை கிளி/ இந்துக்கல்லூரி மீது மேலும் ஒருபடி மேலான பற்றுதலை ஏற்படுத்தியிருக்கிறது.
சிறப்பு என்னவென்றால்.. திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு ஏடு தொடக்கப்பட்ட அதே இடத்தில் (அதே கொட்டிலிருந்த இடத்து மேடையில்) மணிவிழா கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
பதிவு மற்றும் புகைப்படங்கள் – முல்லைத்தீபன்