கட்டடப் பூங்கா | கவிஞர் சிவராஜ்
பல அடுக்குக் கிளைத்துள்ள
இந்தக் கட்டடப் பூங்கா
மிளிரும் வண்ண விளக்குகளும்
காற்றுப்புகாத கண்ணாடிக் கதவுகளும் கொண்டது.
வானத்தையோ, மேகக் கூடத்தையோ
நிலவையோ நட்சத்திரங்களையோ
இங்கு கண்டு ரசிக்க முடியாது
வெட்டவெளி கிடையாது
புற்களும் செடிகளும்
மலர்களும் வண்டுகளும் பறவைகளும்
இன்னும் பிறவுக்கும் வாய்ப்பேயில்லை
இங்கு படியேறுபவர்களும்
படிகளும் மேமே செல்லும்
கார் பார்க்கிங்கூட மேல் மாடியில்தான்
நகரும் படிக்கட்டுமேலேறும் அருவிபோல்
திடீரென உட்செல்லும்
உலகத்தின் பிரபலமான
கலாச்சார உடையணிந்து
புகைப்படம் எடுத்துக்கொள்ளும்
போலியான நவீன வாழ்க்கை
நான்கு புறங்களிலும்
அடைத்துக்கட்டப்பட்ட
பிரமாண்டமான கட்டட வளாகத்தில்
சாப்பிட ஹோட்டல்களும்
கொரிக்க பலகாரங்களும்
பொழுதுபோக்க நவீன தியேட்டர்களும்
குழந்தைகளுக்கு எலக்ட்ரிக் விளையாட்டுகளும்
குட்டிக் குட்டி அடுக்குகளாக
மல்டி மீடியா கடைகளும்
பிணைந்து கிடக்கின்றன
கலாச்சாரம் தொலைத்து
பொழுதையும் காசையும்
கரைத்துவிட்டு வர…
நன்றி – கவிஞர் சிவராஜ்