Thursday, May 9, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் கவிதை | ஈமத்தாழி | தீபச்செல்வன்

கவிதை | ஈமத்தாழி | தீபச்செல்வன்

1 minutes read


மஞ்சளும் சிவப்புமான
ஏதேதோ பொருட்களெல்லாம் தோரணங்களாக
துயிலும் இல்ல நினைவுப்பாடலை முணுமுணுக்கிறான்
யாரோ ஒரு சிறுவன்

அழ முடியாதவர்களுக்காய் வானம் உருக
விளக்குகளின் ஒவ்வொரு துளி நெருப்பிலும்
தெரிந்தன களம் சென்ற வீரர்களின் புன்னகை
மற்றும் இறுதிக் கையசைப்பு

துயிலும் இல்லங்களின்மேல் முகாங்கள்
கல்லறைகளின் மேல் காவலரண்கள்
சிதைமேடுகளின் மேல் துப்பாக்கிகள்

மண்ணுக்காய் மாண்டுபோனவர்கள் உறங்கும்
மயானங்களைகளிலும் துப்பாக்கிகள்
புதையுண்ட சிதைகளோடான யுத்தம்
இன்னும் முடியவில்லை

வாழ்தலும் இல்லை
நினைவுகூர்தலும் இல்லை
கண்ணாடிகளெங்கும் தெறிக்கின்றன
தடைசெய்யப்பட்ட முகங்கள்

சிதைக்கப்பட்ட கல்லறையை சுற்றித் திரியும்
தாயொருத்தி சிந்தும் ஒரு துளி கண்ணீர்
இரண்டாய் பிரித்துவிடுமா இத் தீவை?

வெறித்துப்போயிருக்கும் தெருவில்
வீரர்களின் நினைவுப்படங்களிருப்பதாய்
பூக்களை வைத்துச் செல்லுமொரு தாயின்
ஈமத்தாழிபோல் கனத்திருக்கும் நெஞ்சில்
கோடிச் சுடர்களின் அனல்
0

தீபச்செல்வன்  

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More