‘சிகிச்சை பலனின்றி
காலமானார்’ என்பது
பரீட்சயமாகிவிட்டது!
‘சாகுற வயசா’ என்பதை
கேட்டுக் கேட்டுச்
சலித்துவிட்டது!
‘திடீர்னு என்னாச்சு’
வியப்பதற்கு புதிதல்ல!
‘நல்லாத்தானே இருந்தார்’
எத்தனை பேருக்குத்தான்
இதையே சொல்வது?
இப்போதெல்லாம்
பெரும்பாலும்
யாரோ ஒருவரின்
இறப்புச் செய்தியோடுதான்
நாள் விடிகிறது!
மரணக் கிரகணம்
சூழ்ந்துகொள்ளும்
இப்படியான விடியலை
எப்படி விடியலென்று
அழைக்க முடியும்?
ஒவ்வொரு சாவும்
புதிய செய்தியாகவே
பகிரப்படுகின்றது,
அதே பழைய
எதிர்வினைகளைத் தவிர
நம்மிடம் வேறென்னதான்
இருக்கிறது!!!
சில உதடுகள்
வழமைக்கு மாறான
சொற்களை உதிர்க்கின்றன,
இதுவரை இப்படியான
சொற்கள் அந்த
உதடுகளிலிருந்து
மலர்ந்ததேயில்லை!
மலர்தலுக்கும்
உதிர்தலுக்குமான
வித்தியாசம் இதுதான்;
உதிர்தல் ஒருபோதும்
மகிழ்ச்சியைத்
தரப்போவதில்லை!!!
சி்.கிரிஷாந்த்ராஜ்