பறத்தல் ஒரு மார்க்கம்
மன்மத அம்புகள் துளைப்பதும்
ஆல கால விடம் நுழைவதும்
பறத்தலின் அற்புதக் கீதம்
காற்றின் கடலில் சிறகு கலவி
கொள்கையில்
வெளியின் குழந்தை கண்திறக்கிறது
திறத்தல் பற்றி எதை எழுத
அறிவைத் திறக்க ஆழம் தேவை
அநுபவந் திறக்க வாழ்தல் தேவை
நிசம் திறக்க நிழல் தேவை
ஈற்றில்
நிழலெது
நிசமெது என பறந்தலைகையில்
வாழ்வு முடிந்து தொடங்குகிறது
விடிந்து இருளும் பொழுது போல்
பனித் துளிகளைக் கொண்டு
பவளப் பயிர் வளர்க்க முடியுமா
நிழல் தோற்றத்தை வைத்து
தாஜ்மகாலை அளந்திட முடியுமா
கடிதான நிலத்தில்
கடக்க முடியவில்லையெனில்
கால தேவன் மடியில் பறக்காக் குழந்தைகளே
கடத்தலை எண்ணி பறத்தலைச் சூடின்
நிழல் பறவைகளை வெல்லும்
ஒளிச்சிரிப்பு உன்னது
த.செல்வா
இரவு 7.23
நல்லூர்