அழுகைச் சத்தம்
கண்ணுக்கெட்டிய தூரம்
யாருமில்லை
காலடி நிலம் குலுங்கிட.
🦀
சொற்கள் பூத்ததும்
அதிலிருந்து
கமழ்கிறது
நினைவுகளின் நறுமணம்.
🦀
பசியெடுக்கிறது
வெயிலைத் தின்கிறேன்
வெறுமையைக் குடிக்கிறேன்
நானாகிறேன் சூரியனாய்.
🦀
இலை பறக்கிறது
இறக்கைகள் இல்லை
அது
இறந்து விட்டது.
🦀
மரத்தின் நிழல் தலைவிக்கு
உச்சி வெயில் தலைவனுக்கு
உதிரும் இலைகளாய் பொழுது
மரமாய் காலம்.
🦀
தளும்பும் குளமாய் தலைவி
தாகமுள்ள மானாய் தலைவன்
இடைவெளி
பாலைவனமாய்.
🦀
காற்றிடம் கேள்
கண்ணீரின் தகிப்பை
குருதியின் தவிப்பை
அநியாயமாய் சிந்திய நிலத்திலிருந்து.
🦀
செய்வினை ஊட்டும்
உறுத்து வந்து
அறம் ஒரு போதும்
உறங்காது.
🦀
முட்கள் ஓடுகின்றன
வந்த நிலா போகிறது
போன சூரியன் வருகிறது
காலம் மெளனமாய் கண்காணிக்க.
🦀
இரவு சுட
பகல் குளிர
இதயங்கள் அல்லாட
காலம் பழுதாகி.
🦀
ஆகாயத்தை பூமி
என்னை நீ
உன்னை நான்
பூமி ஆகாயத்தை பார்த்தபடி.
🦀
புறக்கணிக்கப்பட்ட குவளை
நிரம்ப வெறுமை
காத்திருக்கிறது
நிரம்பும் நாளுக்காக.
🦀
குமிழிகள் உண்டாகி
உடைந்து உடைந்து
கண நேரத்திற்குள்
தங்காமல் மீண்டும்.
🦀
வானம் நீலம் ஆழி நீலம்
நிலத்தில் வர்ண பேதம்
நிறமற்ற வாழ்வு
கனவுகளாக நிதம்.
🦀
நதியின் பாதையை
படகால் தெரியலாம்
விதி சொல்லும் கவிதையை
அறிந்துணர ஏதுண்டு சாதனம்.
🦀
நேசம் கடும் விஷம்
மருந்தாக குணமளிக்கும்
அளவு மீறினால்
உயிர் பறிக்கும் ரோகமாகும்.
🦀
வனம் பிறந்து மலையேறி
நதியாடி நாணல் தொட்டு
நறுமலர் நுகர்ந்து நனிச்சுகந்தமாய்
எனைத் தழுவியணைக்கும் தென்றலவள்.
🦀
ரிடையர்டு மிலிடரி ஆபீஸர் தாக்கப்பட்டார்
மக்களின் நண்பர் தாக்கினார்
தடுக்காமல் வேடிக்கை பார்த்தது
செத்த தேசம்.
🦀
வலி கட்டவிழும் நிசிகள்
அம்புப் படுக்கையில் தனிமை
துயரத்தின் உளைச்சல்
ருத்ர தாண்டவமாடுகிறது.
🦀
வசந்ததீபன்