நாளைக்காக காத்திருக்கிறேன்.
நாளை என்பது, எனக்கு தொடரப்போகும்
ஒரு புதிய வரலாற்று கதையாக இருக்கலாம்.
இல்லையேல் நினைவுகளில் முழுவதுமாக
அழித்து விடக் கூடிய
ஒரு மறதியாக இருக்கலாம்.
நாளை என் உணவு உயர்தர வகையினதாக இருக்கலாம்,
இல்லா விட்டால்
வீதிகளில் வீசப்பட்ட
ஈக்களுக்கு சொந்தமானதைக் கூட
நான் உண்ண வேண்டி வரலாம்.
நாளை நான், சட்டைப் பையில் நிரம்பி வழியும்
காகிதக் கட்டுக்களுக்கு உரிமை கொண்டாடலாம்.
இல்லையேல்
வழமையைப் போல்
சில்லறைகள் சேமிக்க
தெருவிலே காத்திருக்கும்
சமிக்ஞை விளக்குகளைப் போல
தவம் இருக்கலாம்.
நாளைய நாழிகையின்
கணங்களையும், நிமிடங்களையும்
நான் கடக்கும் போது,
ஒரு ஆழ்ந்த பெருமூச்சு விடுவேன் – ஏன் எனில்,
நாளை நான் சில புதிய நபர்களை சந்திக்க கூடும்.
அவர்களின் புதிய மன, நிறங்களை அறியக் கூடும்.
இல்லையேல் – மறைமுகமாக அவர்களிடமிருந்து
எனக்கு ஏவப்பட இருக்கும்,
சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களின்
நச்சுக் கதிர்களை கணிக்க நேரிடும்.
நாளை எனது வாழ்வின் பயணங்களின்
இறுதி நாளாகக் கூட இருக்கலாம்.
சில வேளைகளில்
பயணங்கள் தொடர்வதற்கு சில அற்புதங்கள் நிகழலாம்.
இல்லையேல்
நான் மீதம் விட்ட வினைகளின்
பழிகள் பின் தொடர்ந்து அனைத்திற்கும்
முற்றுப் புள்ளி வைக்கலாம்..
காத்திருக்கிறேன் நாளைக்காக!!!
முல்லையின் ஹர்வி