எட்டு மாதம், ஒன்பது மாதம் வரும்பொழுது அரிசி சாதம் ஊட்டக்கூடிய அளவிற்கு குழந்தை வளர ஆரம்பித்துவிடும். அந்த மாதிரி நேரத்தில் குழந்தைக்கு நொய்யரிசியை நன்றாக குழைய வேகவைத்து கூடவே உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து மசித்து இதை தாராளமாகத் தரலாம். சில குழந்தைகளுக்கு இந்த அரிசியும் உருளைக்கிழங்கும் கொடுப்பதால் ஜீரணசக்தி இல்லாமல் அப்பொழுதும் மாந்தம் உண்டாகலாம். அந்த மாதிரி மாந்தம் வருகிற பொழுது தூதுவலையை ரசமாக வைத்துக்கொடுக்கலாம். மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், முள் நீக்கிய தூதுவலை இவையனைத்தையும் லேசாக நெய்யில் வதக்கி ஒன்றிரண்டாக பொடித்து இதன் கூடவே தக்காளியையும் சேர்த்து ரசமாக வைத்து இந்த ரசத்தை ஒரு தேக்கரண்டியிலிருந்து இரண்டு தேக்கரண்டி வரை குழந்தைக்குக் கொடுக்கலாம். இணை உணவோடு தூதுவலை ரசம் கொடுக்கும்பொழுது உணவினால் பெறப்பட்ட அந்த மாந்தத்தை இந்த ரசம் முழுமையாக நீக்கி அந்தக் குழந்தைக்கு சளி இல்லாமல், இருமல் இல்லாமல் மூச்சில் ஏதும் பிரச்சினை இல்லாமல் நன்றாக வளரக்கூடிய சூழலுக்கு அந்தக் குழந்தையைக் கொண்டு செல்வதற்கு இந்தத் தூதுவலை கண்டிப்பாகக் கைக்கொடுக்கும்.
தூதுவலை நன்றாக நரம்புகளை வலுப்படுத்தக்கூடிய அற்புதமான ஒரு மூலிகைப்பொருள். ஒரு பழமொழியே சொல்வார்கள், என்னவென்றால் “தூதுலை மாதுளை இருக்கும் வீட்டில் வாயிலும் மார்பிலும் களங்கமில்லை” என்று சொல்வார்கள். எந்த வீட்டில் தூதுவலை இருக்கிறதோ அந்த வீட்டில் நுரையீரல் சார்ந்த பிரச்சினைகள் இருக்காது என்பது இந்தத் தமிழ் பழமொழியின் அர்த்தம். அதே போல் மாதுளை, மாதுளை இருக்கக்கூடிய வீட்டில் வயிற்றில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று அர்த்தம். ஆக நுரையீரலை வலுப்படுத்தக்கூடிய தன்மை தூதுவலைக்கு உண்டு. குழந்தைகளுக்கு தாராளமாக இதனை ஊட்டி பழக்கலாம். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தூதுவலையை உப்பு, மிளகாய், புளி வைத்து துவையலாக அரைத்து அந்தத் துவையலை நாம் கொடுத்து பழக்கும் பொழுது குழந்தைகளுக்கு சளி இருமல் இல்லாமல் பாதுகாக்க முடியும். நன்றாக அதீத வளர்ச்சியை உருவாக்க முடியும். அந்த வயதிற்கு தகுந்த வளர்ச்சியை உருவாக்கக்கூடிய ஒரு சூழல் உண்டாகும். குழந்தைக்கு மாந்தம் இருக்காது.